சென்னை சூப்பர் கிங்ஸ் வாழ்க! - சுரேஷ் ரெய்னா புகழாரம்


சென்னை சூப்பர் கிங்ஸ் வாழ்க! - சுரேஷ் ரெய்னா புகழாரம்
x

டெல்லி கேபிடல்ஸை தோற்கடித்து ஒரு அற்புதமான விளையாட்டை சென்னை அணி வெளிப்படுத்தியுள்ளது என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

சென்னை,

நடப்பு ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 55வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. டெல்லி தரப்பில் அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக மிச்சேல் மார்ஷ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 20 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக பதிரனா 3 விக்கெட்டுகளும், தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளும், ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்றது.

இந்த நிலையில், சென்னை அணி வெற்றி குறித்து சி.எஸ்.கே முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா டுவிட்டரில் புகழாரம் சூட்டியுள்ளார்.

அந்த பதிவில், "சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாழ்க!. டெல்லி கேபிடல்ஸை தோற்கடித்து என்ன ஒரு அற்புதமான விளையாட்டை சென்னை அணி வெளிப்படுத்தியுள்ளது. விளையாட்டின் ஒவ்வொரு அம்சத்திலும் தங்கள் திறமையை வெளிப்படுத்திய சி.எஸ்.கே சிங்கங்கள் மைதானத்தில் கர்ஜித்தன. இது ஒரு குறிப்பிடத்தக்க முயற்சி, தொடர்ந்து முன்னேறுங்கள்" என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.


Next Story