கோமா நிலையில் இருந்து மீண்டார் தென் ஆப்பிரிக்க இளம் கிரிக்கெட் வீரர் மாண்ட்லி..!!

Image Courtesy : Cricket @Southafrica
கடந்த மே மாதம் இங்கிலாந்தில் மாண்ட்லியை ஒரு நபர் கடுமையாக தாக்கினார்.
பிரிட்ஜ்வாட்டர்,
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் மாண்ட்லி குமாலோ, வயது 20. இவர் 2020 ஆம் ஆண்டு நடந்த இளையோர் கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் விளையாடியவர். மேலும் இவர் தென்னாப்பிரிக்காவில் உள்ள நார்த் பீதர்டன் கிரிக்கெட் கிளப்-க்காக விளையாடி வருகிறார்.
இவர் கடந்த மே மாதம் 29 ஆம் தேதி இரவு இங்கிலாந்தில் உள்ள பிரிட்ஜ்வாட்டர் பகுதியில் போட்டியில் வெற்றி பெற்றதற்காக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது இவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மிக கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலே மாண்ட்லி மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
குமாலோவுக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதாகவும், சவுத்மீட் மருத்துவமனையில் கோமா நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது கோமா நிலையில் இருந்து மீண்டுள்ளார் என நார்த் பீதர்டன் கிளப் அணியில் ஆடிவரும் மாண்ட்லியின் சக வீரரான ஐரிஷ் கூறியுள்ளார். மேலும் மாண்ட்லி தற்போது செயற்கை கருவிகள் எதுவும் இல்லாமல் தானாக சுவாசித்து வருவதாக ஐரிஷ் தெரிவித்துள்ளார்.






