ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி: தொடரை வென்று அசத்தியது இந்திய அணி..!!


ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி: தொடரை வென்று அசத்தியது இந்திய அணி..!!
x

Image Courtacy: ICCTwitter

தினத்தந்தி 24 Sep 2023 4:57 PM GMT (Updated: 25 Sep 2023 12:23 AM GMT)

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 99 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.

இந்தூர்,

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று நடந்தது. இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா சேர்க்கப்பட்டார். ஆஸ்திரேலிய அணியில் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான கம்மின்சுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. இதனால் ஸ்டீவன் சுமித் அந்த அணியை வழிநடத்தினார். மேலும் மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோரும் நீக்கப்பட்டனர். இவர்களுக்கு பதிலாக ஹேசில்வுட், அலெக்ஸ் கேரி மற்றும் புதுமுக பவுலர் ஸ்பென்சர் ஜான்சன் இடம் பிடித்தனர்.

'டாஸ்' ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதன்படி சுப்மன் கில்லும், ருதுராஜ் கெய்க்வாட்டும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். முதல் பந்தையே பவுண்டரிக்கு ஓடவிட்ட ருதுராஜ் 8 ரன்னில் வீழ்ந்தார். 2-வது விக்கெட்டுக்கு கில்லுடன், ஸ்ரேயாஸ் அய்யர் இணைந்தார். குறைந்த பவுண்டரி தூரம், பேட்டிங்குக்கு சொர்க்கமான ஆடுகளம் ஆகியவற்றை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட கில்லும், அய்யரும் ஆஸ்திரேலிய பந்துவீச்சை அடித்து நொறுக்கி துரிதமாக ரன் சேகரித்தனர். 9.5 ஓவரில் சிறிது நேரம் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. 12.5 ஓவர்களில் இந்தியா 100-ஐ தொட்டது.



ஸ்ரேயாஸ், கில் சதம்

தொடர்ந்து நேர்த்தியான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் அய்யர் தனது 3-வது சதத்தை ருசித்தார். காயத்தில் இருந்து குணமடைந்து அணிக்கு திரும்பிய பிறகு தான் நல்ல நிலையை எட்டிவிட்டேன் என்பதை நிரூபித்து காட்டி விட்டார். கில் தனது 6-வது சதத்தை நிறைவு செய்தார்.

அணியின் ஸ்கோர் 216-ஆக உயர்ந்தபோது, ஸ்ரேயாஸ் அய்யர் 105 ரன்களில் (90 பந்து, 11 பவுண்டரி, 3 சிக்சர்) பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆனார். சுப்மன் கில் 104 ரன்னில் (97 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்) வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் லோகேஷ் ராகுல், இஷான் கிஷன் ஆகியோரும் கணிசமான பங்களிப்பை அளித்தனர். இஷான் கிஷன் 31 ரன்னில் ஜம்பாவின் சுழலில் சிக்கினார்.



சூர்யகுமார் மிரட்டல்

இதைத் தொடர்ந்து ராகுலுடன், சூர்யகுமார் யாதவ் ஜோடி போட்டார். இதன் பிறகு ஆட்டம் மேலும் சூடுபிடித்தது. சூர்யகுமார், ஆஸ்திரேலிய பந்துவீச்சை பின்னியெடுத்தார். கேமரூன் கிரீனின் ஒரே ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்சர்களை தெறிக்கவிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார். அவர் 24 பந்துகளில் 50 ரன்களை எட்டி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிவேகமாக அரைசதம் அடித்த இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.

ஸ்கோர் 355-ஐ எட்டிய போது ராகுல் 52 ரன்னில் (38 பந்து, 3 சிக்சர், 3 பவுண்டரி) கிரீன் பந்துவீச்சில் போல்டு ஆனார். சூர்யகுமார் களத்தில் நின்றதால் ஸ்கோர் 400-ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த மைல்கல்லை அடைய கடைசி 3 பந்தில் 4 ரன் தேவைப்பட்ட நிலையில், 3 ரன் மட்டுமே எடுத்தனர்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 399 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவின் 'மெகா' ஸ்கோர் இது தான். இதற்கு முன்பு 2013-ம் ஆண்டு பெங்களூருவில் நடந்த ஆட்டத்தில் 6 விக்கெட்டுக்கு 383 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. சூர்யகுமார் யாதவ் 72 ரன்களுடனும் (37 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்), ஜடேஜா 13 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.



மழையால் ஓவர் குறைப்பு

அடுத்து 400 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலியாவுக்கு வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா ஒரே ஓவரில் 'இரட்டை செக்' வைத்தார். அவரது பந்து வீச்சில் மேத்யூ ஷார்ட் (9 ரன்), அடுத்து வந்த கேப்டன் சுமித் (0) ஆட்டமிழந்தனர். இதனால் ஆஸ்திரேலியா நெருக்கடி வளையத்தில் சிக்கியது. அந்த அணி 9 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 56 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்தது. இதனால் 1¼ மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து 'டக்வொர்த் லீவிஸ்' விதிமுறைப்படி ஆஸ்திரேலியாவுக்கு 33 ஓவர்களில் 317 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.

கடின இலக்கை நோக்கி தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னரும், மார்னஸ் லபுஸ்சேனும் சிறிது நேரம் போராடினர். லபுஸ்சேனும் (27 ரன்), வார்னரும் (53 ரன், 39 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) அஸ்வினின் சுழல் வலையில் சிக்க, அதன் பிறகு ஆஸ்திரேலியா முழுமையாக தடம் புரண்டது. ஒரு கட்டத்தில் 8 விக்கெட்டுக்கு 140 ரன்களுடன் மோசமான நிலையில் பரிதவித்தது. ஆனால் 9-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சீன் அப்போட்டும், ஹேசில்வுட்டும் ஆச்சரியப்படும் வகையில் மட்டையை சுழற்றினர். இவர்கள் கவுரவமாக ஸ்கோர் 200-ஐ கடக்க உதவினர். சிக்சர் மழை பொழிந்த அப்போட் 29 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். ஒரு வழியாக ஹேசில்வுட் 23 ரன்னிலும், சீன் அப்போட் 54 ரன்னிலும் (36 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்) போல்டு ஆனார்கள்.



இந்தியா வெற்றி

முடிவில் ஆஸ்திரேலியா 28.2 ஓவர்களில் 217 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 99 ரன்கள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் அஸ்வின், ஜடேஜா தலா 3 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஸ்ரேயாஸ் அய்யர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் தனதாக்கியது. முதல் ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. கடைசி ஒரு நாள் போட்டி 27-ந்தேதி ராஜ்கோட்டில் நடக்கிறது.

3 ஆயிரம் சிக்சர் அடித்து இந்தியா சாதனை

* இந்தூர் ஹோல்கர் ஸ்டேடியம் இந்தியாவுக்கு ராசியானது. இங்கு தோல்வி பக்கமே செல்லாத இந்திய அணிக்கு இது 7-வது வெற்றியாக அமைந்தது.

* ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா தொடர்ச்சியாக சந்தித்த 5-வது தோல்வியாகும். இந்திய தொடருக்கு முன்பாக தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3 ஆட்டங்களில் சறுக்கி இருந்தது.

* ஒட்டு மொத்த சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி) குறிப்பிட்ட ஒரு அணிக்கு எதிராக அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சிறப்பை அஸ்வின் (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 144 விக்கெட்) பெற்றுள்ளார். இதுவரை முதலிடத்தில் இருந்த கும்பிளேவை (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 142 விக்கெட்) முந்தியுள்ளார்.

* ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கேமரூன் கிரீன் இந்த ஆட்டத்தில் 10 ஓவர்களில் 103 ரன்களை வாரி வழங்கி 2 விக்கெட் எடுத்தார். ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய பவுலரின் 3-வது மோசமான பந்துவீச்சு இதுவாகும்.

* இந்த ஆட்டத்தில் இந்தியா தரப்பில் 18 சிக்சர்கள் நொறுக்கப்பட்டன. இதையும் சேர்த்து ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்தியாவின் சிக்சர் எண்ணிக்கை 3,007 ஆக (1,040 ஆட்டம்) உயர்ந்தது. ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் 3 ஆயிரம் சிக்சர் விளாசிய முதல் அணி என்ற மகத்தான சாதனையை இந்தியா படைத்திருக்கிறது. 2-வது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் (2,953 சிக்சர்) உள்ளது.



எடுபடாத வார்னரின் யுக்தி

இடக்கை பேட்ஸ்மேனான ஆஸ்திரேலியாவின் வார்னர், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பந்துவீச்சை சந்தித்த போது வலது கை பேட்ஸ்மேன்போல் நின்று பேட்டிங் செய்தார். ஒரு பவுண்டரியும் அடித்தார். ஆனால் அவரது இன்னொரு ஓவரில் மீண்டும் வலது கை பேட்ஸ்மேன் போல் மாறி பந்தை அடிக்க முயன்ற போது எல்.பி.டபிள்யூ. ஆகிப்போனார்.

'நம்பர் ஒன்' இடத்தை தக்கவைத்தது இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றதால், ஐ.சி.சி. ஒரு நாள் போட்டி அணிகளின் தரவரிசையில் 117 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது. கடைசி ஆட்டத்தில் தோற்றாலும் பிரச்சினை இல்லை. உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கு இந்தியா 'நம்பர் ஒன்' அணியாக நுழைகிறது. பாகிஸ்தான் 115 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 110 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளன.


Next Story