பிளே ஆப்க்கு தகுதி பெற்றது அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டது தான் காரணம் - கேப்டன் டோனி பேட்டி


பிளே ஆப்க்கு தகுதி பெற்றது அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டது தான் காரணம் - கேப்டன் டோனி பேட்டி
x
தினத்தந்தி 21 May 2023 12:48 PM GMT (Updated: 21 May 2023 2:08 PM GMT)

பிளே ஆப்க்கு தகுதி பெற்றது அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டது தான் காரணம் என்று கேப்டன் டோனி கூறினார்.

புதுடெல்லி,

16-வது ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. இன்னும் 4 லீக் ஆட்டங்களே எஞ்சியுள்ள நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. பஞ்சாப், ஐதராபாத், டெல்லி அணிகள் பிளே ஆப் சுற்றிலிருந்து வெளியேறி விட்டன.

இந்த நிலையில், நேற்று 2 முக்கியமான லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சென்னை அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் சென்னை அணி 2வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

நேற்றைய போட்டி குறித்து சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியதாவது:-

பிளே ஆப்பிற்கு தகுதி பெற்றதற்கு தனி சூத்திரம் எதுவும் இல்லை. அணியில் வீரர்களுக்கு அவர்களது பலத்திற்கு ஏற்றவாறு ரோல்கள் கொடுக்கப்படுகிறது. மேலும் அவர்களது பலவீனம் தெரிந்து அதில் வளர்ச்சி அடைய பயிற்சிகளும் உரிய கவனமும் செலுத்தப்பட்டு வருகிறது.

சில வீரர்கள் சில இடங்களை தியாகம் செய்து மற்ற இடங்களிலும் விளையாட வேண்டிய சூழலும் இருக்கும். அதற்கு தகவமைத்துக் கொள்கின்றனர். இவை அனைத்திற்கும் மேலாக அணியில் இருக்கும் பயிற்சியாளர்கள் மற்றும் அவர்களுக்கு உதவி வரும் உதவியாளர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது தான் இதற்கு காரணமாக பார்க்கிறேன்.

டெத் பவுலிங் முக்கியம் என்று பார்க்கிறேன். பத்திரனா அவரது வேலையை சிறப்பாக செய்து வருகிறார். தேஷ்பாண்டே தன்னை நன்றாக வளர்த்துக் கொண்டிருக்கிறார். இதுபோன்று அணிக்காக செயல்படும் வீரரே தேவை. ஒவ்வொரு போட்டியிலும் தனிப்பட்ட முறையில் நன்றாக செயல்பட்டிருக்கிறார் என்று நாங்கள் பார்ப்பதில்லை. அணியுடன் சேர்ந்து எப்படி செயல்படுகிறார்? கொடுக்கப்படும் ரோலுக்கு சரி வருவார்களா? என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

வரும் 23-ம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெறும் இறுதி போட்டிக்கான முதல் குவாலிபயர் போட்டியில் முதல் இடத்தில் உள்ள குஜராத்துடன் சென்னை அணி பலப்பரீட்சை நடத்த உள்ளது.


Next Story