ரஜத் படிதார் அரைசதம் : ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு அணி


ரஜத் படிதார் அரைசதம் : ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு அணி
x

Image Courtesy : Twitter @IPL

ராஜஸ்தான் அணி தரப்பில் பிரசித் கிருஷ்ணா, மெக்காய் 3 விக்கெட்கள் கைப்பற்றி அசத்தினர்.

ஆமதாபாத்,

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்துக்கு வந்து விட்டது. இன்னும் 2 ஆட்டங்களில் புதிய சாம்பியன் யார் என்பது தெரிந்து விடும். ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி ஏற்கனவே இறுதிசுற்றை எட்டி விட்டது.

இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது என்பதை நிர்ணயிக்கும் 2-வது தகுதி சுற்று ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் முதல் தகுதி சுற்றில் தோல்வி அடைந்த சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெற்ற டு பிளேசிஸ் தலைமையிலான பெங்களூரு அணியுடன் மோதி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி அணி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

தொடக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி 7 ரன்களில் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் ஆட்டமிழந்து மீண்டும் ஒருமுறை ஏமாற்றம் அளித்தார். அவரை தொடர்ந்து கடந்த போட்டியில் சதம் அடித்த படிதார் - கேப்டன் டு பிளசிஸ் உடன் ஜோடி சேர்ந்தார்.

நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டு பிளசிஸ் 27 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் . ஒருமுனையில் படிதார் அற்புதமாக விளையாட வர மறுமுனையில் மேக்ஸ்வெல் ட்ரென்ட் போல்ட் பந்தில் ஓபே மெக்காயிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

சிறப்பாக ஆடிய படிதார் அரைசதம் கடந்து அசத்தினார். 42 பந்துகளில் 58 ரன்கள் அடித்திருந்த நிலையில் அஸ்வின் பந்தில் அவுட்டாகி வெளியேறினார்.'

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் குவித்தது. 158 ரன்கள் அடித்தால் இறுதி போட்டிக்கு முன்னேறலாம் என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்குகிறது.


Next Story