ஐபிஎல்: விரைவில் பெங்களூரு அணி 4 கோப்பைகளை வெல்ல வாய்ப்புள்ளது- டிவில்லியர்ஸ்


ஐபிஎல்: விரைவில் பெங்களூரு அணி 4 கோப்பைகளை வெல்ல வாய்ப்புள்ளது- டிவில்லியர்ஸ்
x

Image Courtesy: PTI

கடந்த 15 வருடங்களாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி இதுவரை ஒரு முறை கூட கோப்பை வெல்லவில்லை.

சென்னை,

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு துவங்கிய ஐபிஎல் தொடரானது இதுவரை 15 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிலையில் அடுத்ததாக 2023-ஆம் ஆண்டிற்கான 16-வது ஐபிஎல் தொடரானது வரும் மார்ச் மாதத்தில் துவங்கி நடைபெற உள்ளது. இதற்காக டிசம்பர் 23-ஆம் தேதி கொச்சியில் மினி ஏலம் நடைபெற இருப்பதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் அடுத்த சில ஆண்டுகளில் பெங்களூரு அணி 4 கோப்பைகள் வரை வெல்ல வாய்ப்புள்ளதாக அந்த அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஏபி டிவில்லியர்ஸ் தெரிவித்து உள்ளார்.

கடந்த 15 வருடங்களாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி இதுவரை ஒரு முறை கூட கோப்பை வெல்லவில்லை. குறிப்பாக அந்த அணிக்காக அதிரடி வீரர்கள் கெயில், வாட்சன், லோகேஷ் ராகுல், டி வில்லியர்ஸ் போன்ற பல வீரர்கள் கடந்த காலங்களில் விளையாடியுள்ள போதும் அந்த அணியால் கோப்பை வெல்ல முடியவில்லை. மேலும் அந்த அணியின் நாயகனாக கருதப்படும் விராட் கோலியால் கூட அந்த அணிக்கு தற்போது வரை கோப்பையை வென்று கொடுக்க முடியவில்லை.

இந்த நிலையில் பெங்களூரு அணி குறித்து பேசிய ஏபி டிவில்லியர்ஸ், " ஐபிஎல் தொடர் தொடங்கி 15 ஆண்டுகள் கடந்துவிட்டன. இதனால் இதுவரை கோப்பை வெல்லவில்லை என்ற நிலையை உடைக்க பெங்களூரு அணி விரும்புவார்கள்.

2023 கோப்பையை அவர்கள் வென்றால், அதை தொடர்ந்து அவர்கள் விரைவில் அடுத்து வரும் ஆண்டுகளில் பெங்களூரு அணி இரண்டு, மூன்று என நான்கு கோப்பை வரை வெல்வார்கள் என்று நான் நினைக்கிறேன், ஆனால் என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். டி20 கிரிக்கெட்டில் சில நேரங்களில் எதுவும் நடக்கலாம். குறிப்பாக நாக் அவுட் போட்டிகளை கணிக்கவே முடியாது. ஆனால் பெங்களூரு அணியின் நேரம் விரைவில் வரவிருக்கிறது" என்றார்.


Next Story