'சிறிய அணிகள் அதிகமான போட்டிகளில் விளையாட வேண்டியது அவசியம்'- கிறிஸ் கெய்ல்


சிறிய அணிகள் அதிகமான போட்டிகளில் விளையாட வேண்டியது அவசியம்- கிறிஸ் கெய்ல்
x

பெரிய அணிகளைப் போன்று மற்ற அணிகளின் வீரர்களுக்கும் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று கெய்ல் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் 43 வயதான கிறிஸ் கெய்ல் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

"இத்தனை ஆண்டுகளில் கிரிக்கெட் கொஞ்சம் மாறி விட்டது. இப்போது கிரிக்கெட் விளையாட்டு ஒரு தொழிலாகி விட்டது. 20 ஓவர் லீக் கிரிக்கெட்டில் மட்டுமல்ல, டெஸ்ட் போட்டிக்கும் அதிக அளவில் பணம் செலவிடப்படுகிறது. சிறிய அணிகளை காட்டிலும் பெரிய அணிகளுக்கு அதிக ஊதியம் வழங்கப்படுகிறது. இதனால் சிறிய அணிகள் பாதிக்கப்படுகின்றன.

இந்த குறைகளை களைய சரியான வழிமுறை உருவாக்கப்பட வேண்டும். தரவரிசையில் பின்தங்கிய அணிகள் திறமையை வளர்த்துக் கொள்ள அதிகமான போட்டிகளில் விளையாட வேண்டியது அவசியமாகும். அதற்குரிய உள்கட்டமைப்பு வசதிகளை அவர்களுக்கு உருவாக்கி கொடுக்க வேண்டும்.

பெரிய அணியில் உள்ள வீரர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் போன்று மற்ற அணிகளின் வீரர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற பெரிய அணிகளின் ஆதிக்கம் மட்டுமே நீடிக்கும். ஒரு கட்டத்தில் கிரிக்கெட் மக்களுக்கு சலித்து போய் விடும்."

இவ்வாறு கெய்ல் கூறினார்.


Next Story