இவ்வளவு சதம் அடிப்பேன் என்று நினைக்கவில்லை: மனம் திறந்த விராட் கோலி
அணிக்காக எனது சிறப்பான பங்களிப்பை வழங்க வேண்டும் என்றுதான் நான் எப்போதும் நினைப்பேன் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடப்பு உலக கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை ஒரு சதம் மற்றும் 3 அரைசதங்கள் என தனது அபார ஃபார்மில் உள்ளார். கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஒருநாள் போட்டிகளில் அவரது 48-வது சதத்தைப் பதிவு செய்தார்.
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் தற்போது 49-சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் உள்ளார். டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி விரைவில் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் விராட் கோலி சதமடித்து சச்சினின் இந்த சாதனையை சமன் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது, இருப்பினும், அவர் 5 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். விராட் கோலி விரைவில் 50-வது சதத்தை பூர்த்தி புதிய வரலாற்று சாதனை நிகழ்த்துவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்த நிலையில், தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கும்போது இத்தனை ரன்கள் மற்றும் சதங்கள் அடிப்பேன் என நினைத்துக் கூட பார்க்கவில்லை என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விராட் கோலி கூறியதாவது:
நான் எப்போதும் நிறைய சாதனைகள் செய்ய வேண்டும் என நினைப்பேன். ஆனால், எனது கிரிக்கெட் பயணத்தில் அந்த சாதனைகள் இவ்வாறுதான் இருக்கும் என்று நான் நினைத்ததில்லை. யாராலும் இதனை திட்டமிட முடியாது. இந்த 12 ஆண்டுகளிலில் இத்தனை ரன்கள் மற்றும் சதங்கள் அடிப்பேன் என நினைத்ததில்லை. அணிக்காக எனது சிறப்பான பங்களிப்பை வழங்க வேண்டும் என நினைப்பேன். என்னுடைய 100 சதவிகித உழைப்பை அதற்காக வழங்குவேன்" என்றார்.