சையத் முஷ்டாக் அலி கோப்பை; சாம்பியன் பட்டம் வென்றது பஞ்சாப் அணி...!
![சையத் முஷ்டாக் அலி கோப்பை; சாம்பியன் பட்டம் வென்றது பஞ்சாப் அணி...! சையத் முஷ்டாக் அலி கோப்பை; சாம்பியன் பட்டம் வென்றது பஞ்சாப் அணி...!](https://media.dailythanthi.com/h-upload/2023/11/07/1590422-2-punjab.webp)
Image Courtesy: @BCCIdomestic
சையத் முஷ்டாக் அலி தொடரின் இறுதிப்போட்டி நேற்று இரவு மொகாலியில் நடைபெற்றது.
மொகாலி,
சையத் முஷ்டாக் அலி தொடரின் இறுதிப்போட்டி நேற்று இரவு மொகாலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் பஞ்சாப் - பரோடா அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் 20 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 223 ரன்கள் குவித்தது. பஞ்சாப் தரப்பில் அன்மோல்பிரித் சிங் சதம் (113 ரன்) அடித்து அசத்தினார்.
இதையடுத்து 224 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பரோடா அணி களம் இறங்கியது. பரோடா அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ஜோத்ஸ்னில் சிங் 4 ரன், நினாந் ரத்வா 47 ரன், அடுத்து களம் இறங்கிய அபிமன்யு சிங் 61 ரன், க்ருனால் பாண்ட்யா 45 ரன், விஷ்ணு சோலங்கி 28 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பரோடா அணியால் 7 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் பஞ்சாப் அணி 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.