டி20 உலகக்கோப்பை: வெற்றியுடன் தொடங்கிய ஜிம்பாப்வே அணி


டி20 உலகக்கோப்பை: வெற்றியுடன் தொடங்கிய ஜிம்பாப்வே அணி
x

Image Tweeted By @ICC 

ஜிம்பாப்வே அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

ஹோபர்ட்,

8வது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நேற்று தொடங்கியது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள 16 அணிகளில் 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறின. மீதம் 4 அணிகளை தேர்வு செய்யும் விதமாக முதல் சுற்று ஆட்டங்களில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி ஸ்காட்லாந்து அதிர்ச்சி அளித்தது.

இதை தொடர்ந்து நடைபெற்ற 2-வது போட்டியில் ஜிம்பாப்வே- அயர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஜிம்பாப்வே அணியில் தொடக்க வீரர்களாக ரெஜிஸ் சகாப்வா மற்றும் கேப்டன் கிரேக் எர்வின் களமிறங்கினர்.

ஜிம்பாப்வே அணி ரன் கணக்கை தொடங்குவதற்கு முன்பாக ரெஜிஸ் சகாப்வா டக் அவுட்டாக்கி ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய வெஸ்லே 22 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, அதற்கு அடுத்த ஓவரிலே கேப்டன் கிரேக் எர்வின் 9 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் ஒரு கட்டத்தில் ஜிம்பாப்வே அணி 37 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

பின்னர் சீன் வில்லியம்ஸ் உடன் அனுபவ ஆல்ரவுண்டர் சிக்கந்தர் ராசா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் வில்லியம்ஸ் நிதானம் காட்ட, சிக்கந்தர் ராசா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அயர்லாந்து அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த சிக்கந்தர் பவுண்டரி மழைகளை பொழிந்தார். தொடர்ந்து சீன் வில்லியம்ஸ் 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஒருமுனையில் விக்கெட்கள் சரிந்தாலும் சிக்கந்தர் ராசா அரைசதம் கடந்து தொடர்ந்து சிறப்பாக விளையாடினார். இவரின் அதிரடியால் இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களை குவித்தது. 48 பந்துகளில் 82 ரன்கள் குவித்த சிக்கந்தர் ராசா, இன்னிங்சின் கடைசி பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அயர்லாந்து அணியின் சார்பாக ஜோஷுவா 3 விக்கெட்களும், சிமி சிங் , மார்க் அடேர் தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

இதை தொடர்ந்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து களமிறங்கியது. அந்த அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. அந்த அணியின் தொடக்க மற்றும் நடுவரிசை வீரர்கள் ஆண்ட்ரூ பால்பிர்னி (3 ரன்கள்), பால் ஸ்டிர்லிங் (டக் அவுட்) , லோர்கன் டக்கர் (11 ரன்கள்), ஹாரி டெக்டர் (1 ரன்கள்) ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 22 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது.

பின்னர் ஜார்ஜ் டாக்ரெல்- கர்டிஸ் கேம்பர் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும் இந்த ஜோடியும் வெகு நேரம் நீடிக்கவில்லை. ஜார்ஜ் டாக்ரெல் 24 ரன்களிலும், கர்டிஸ் கேம்பர் 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் ஜிம்பாப்வே அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே அணி தரப்பில் முசரபானி 3 விக்கெட்களும், டெண்டாய் சதாரா, ரிச்சர்ட் தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர். இதன் மூலம் இந்த உலகக்கோப்பை தொடரை ஜிம்பாப்வே அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.


Next Story