டி.என்.பி.எல் வெளியேற்றுதல் சுற்று : கோவை அணி வெற்றி பெற 127 ரன்கள் இலக்கு


டி.என்.பி.எல் வெளியேற்றுதல் சுற்று : கோவை அணி வெற்றி பெற 127 ரன்கள் இலக்கு
x

Image Tweeted By @LycaKovaiKings

மதுரை அணியில் அருண் கார்த்திக் நிலைத்து நின்று விளையாடி 47 ரன்கள் எடுத்தார்.

சேலம்,

6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடித்த நெல்லை ராயல் கிங்ஸ், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறின.

இந்த நிலையில் இன்று வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்-கோவை கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மதுரை அணியின் கேப்டன் சதுர்வேத் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

தொடக்க வீரர்களாக ஆதித்யா மற்றும் அருண் கார்த்திக் களமிறங்கினர். பாலு சூர்யா பந்துவீச்சில் 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆதித்யா ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த அனிருத் 7 ரன்களிலும் சதுர்வேத் 16 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

ஒருமுனையில் விக்கெட்கள் சரிந்தாலும் மறுமுனையில் அருண் கார்த்திக் நிலைத்து நின்று விளையாடினார். அவர் 47 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் மதுரை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. கோவை அணி தரப்பில் அஜித், அபிஷேக் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். இதையடுத்து 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை அணி களமிறங்குகிறது.


Next Story