டி.என்.பி.எல் : சூர்யபிரகாஷ், சஞ்சய் அதிரடி - நெல்லை ராயல் கிங்ஸ் அணி 184 ரன்கள் குவிப்பு..!!


டி.என்.பி.எல் : சூர்யபிரகாஷ், சஞ்சய் அதிரடி - நெல்லை ராயல் கிங்ஸ் அணி 184 ரன்கள் குவிப்பு..!!
x

Image Courtesy : Twitter @StarSportsTamil 

தினத்தந்தி 23 Jun 2022 3:32 PM GMT (Updated: 23 Jun 2022 5:59 PM GMT)

185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்குகிறது.

நெல்லை,

6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்கி அடுத்த மாதம் (ஜூலை) 31-ந்தேதி வரை நெல்லை, சேலம், கோவை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் நடத்தப்படுகிறது. முதல் நாளான இன்று நெல்லை சங்கர் நகரில் அரங்கேறும் தொடக்க ஆட்டத்தில் கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீசும், பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்சும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டன் கவுசிக் காந்தி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி நெல்லை ராயல் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக சூர்யபிரகாஷ் - பிரதோஷ் பால் களமிறங்கினர். சந்தீப் வாரியர் பந்துவீச்சில் பிரதோஷ் பால் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அவரை தொடர்ந்து பாபா இந்திரஜித் 3ரன்களிலும் பாபா அபராஜித் 2ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் ஜோடி சேர்ந்த சூர்யபிரகாஷ் - சஞ்சய் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர்.

இறுதியில் சூர்யபிரகாஷ் 50 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சஞ்சய் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 47 பந்துகளில் 87 ரன்கள் குவித்தார். இறுதியில் நெல்லை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு`184 ரன்கள் குவித்தது. 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்குகிறது.


Next Story