உம்ரான் மாலிக் டி20 போட்டிகளை விட ஒருநாள் போட்டிகளுக்கு மிகவும் பொருத்தமானவர் - வாசிம் ஜாபர்


உம்ரான் மாலிக் டி20 போட்டிகளை விட ஒருநாள் போட்டிகளுக்கு மிகவும் பொருத்தமானவர் - வாசிம் ஜாபர்
x

Image Courtesy: AFP 

உம்ரான் மாலிக் டி20 போட்டிகளை விட ஒருநாள் போட்டிகளுக்கு மிகவும் பொருத்தமானவர் என வாசிம் ஜாபர் கூறியுள்ளார்.

மும்பை,

நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. அதன்படி இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஆக்லாந்தில் நடைபெற்றது.

இதில் இந்திய அணி நிர்ணயித்த 307 ரன்கள் இலக்கை டாம் லாதமின் அதிரடி சதம் மற்றும் கேன் வில்லியம்சனின் நிதானமான ஆட்டத்தினால் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி கைப்பாற்றியது. இந்த தொடரின் 2வது ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

முதலாவது ஆட்டத்தில் இந்திய அணியில் அறிமுக வீரராக உம்ரான் மாலிக் இடம் பெற்றார். அவர் 10 ஓவர்களில் 66 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வசீம் ஜாபர் இந்திய அணி ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாடியதே தோல்விக்கு காரணமாக அமைந்தது என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து வாசிம் ஜாபர் கூறியதாவது:-

டாம் லாதம் போன்ற திறமையான வீரர்களை விரைவில் ஆட்டம் இழக்க செய்யுங்கள். நியூசிலாந்தில் அவர் ஒரு முக்கியமான வீரராக திகழ்கிறார். நியூசிலாந்தை வீழ்த்த வேண்டும் என்றால் நீங்கள் அவர்களது விக்கெட்டை விரைவில் வீழ்த்த வேண்டும். வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் டி20 கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வர மாட்டார்.

அவர் டி20 கிரிக்கெட்டை விட ஒருநாள் போட்டியில் தான் சிறப்பாக செயல்படுவார் என்று நினைக்கிறேன். காரணம் டி20 கிரிக்கெட்டில் நிறைய வித்தியாசமான பந்துகளை வீச வேண்டும். அது அவருக்கு கிடையாது. மாறாக ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரே லைனில் சரியாக தொடர்ந்து வீச வேண்டும் . இதனை உம்ரான் மாலிக் நன்றாக செய்தார்.

இதேபோன்று இரண்டாவது ஒருநாள் போட்டியில் சாகலுக்கு ஓய்வு வழங்கிவிட்டு குல்தீப் யாதவை அணியில் சேர்க்க வேண்டும். குல்திப் யாதவ் நுணுக்கங்களாக பந்து வீசுவார். அதனை எதிர்கொள்ள நியூசிலாந்து வீரர்கள் தடுமாறுவார்கள். இதனால் அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story