இவரைப் போல ஒரு வீரர் பாகிஸ்தான் அணிக்கு நிச்சயம் தேவை" - இந்திய வீரரை புகழ்ந்த சாகித் அப்ரிடி


இவரைப் போல ஒரு வீரர் பாகிஸ்தான் அணிக்கு நிச்சயம் தேவை - இந்திய வீரரை புகழ்ந்த சாகித் அப்ரிடி
x
தினத்தந்தி 28 Sep 2022 11:53 AM GMT (Updated: 28 Sep 2022 12:11 PM GMT)

இஸ்லாமாபாத்

இந்திய அணியின் சிறந்த ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மிகச் சிறப்பாக ஆடும் அவர் இந்திய அணியின் நம்பத்தகுந்த வீரராக மாறி உள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் ஆவுட் ஆகாமல் 26 பந்துகளில் 71 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றி பெற செய்தார்.

இந்திய அணி வெற்றி பெற 2 பந்துகளில் 4 ரன்கள் தேவை என்றிருந்த போது எந்த சலனமும் இல்லாமல் பவுண்டரி அடித்தார் அவர். ஹர்திக் பாண்டியாவின் இந்த சிறப்பான பேட்டிங் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடியை வெகுவாகக் கவர்ந்து உள்ளது.

ஹர்திக் பாண்டியா போன்ற ஒரு சிறப்பான வீரர பாகிஸ்தான் அணியில் இல்லை என்பதை ஒத்துக்கொண்டு உள்ளார் அப்ரிடி.

தனியார் டிவி ஒன்றுக்கு பேட்டி அளித்த அப்ரிடி கூறியதாவது:-

நமக்கு ஹர்திக் பாண்டியா போன்ற ஒரு வீரர் வேண்டும். மிடில் ஆர்டரில் ஆடக்கூடிய, கடைசி நேரத்தில் வந்து ஆட்டத்தை சிறப்பாக முடித்துக் கொடுக்கக்கூடிய, ஒருசில சிறப்பான ஓவர்களை வீசக்கூடிய, நம்பத்தகுந்த ஒரு வீரர் பாகிஸ்தான் அணிக்குத் தேவை.

ஹர்திக் பாண்டியா போன்ற ஒரு பினிஷர் நம்மிடம் இல்லை. ஆசிப் அலி, குஷ்தில் ஷா போன்றவர்கள் அந்த வேலையை செய்வார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவர்களால் முடியவில்லை. நவாசும் சீராக விளையாடுவதில்லை. ஷதாப் கான் கூட அப்படித்தான். இந்த நான்கு வீரர்களில் குறைந்தபட்சம் இருவராவது சீராக விளையாடியாகவேண்டும்.

ஷதாப் கானின் பந்துவீச்சும் மிகவும் முக்கியமானது. அவர் சிறப்பாக பந்துவீசும் போட்டியில் பாகிஸ்தான் நிச்சயம் வெற்றி பெறும்" என்று கூறினார்

2022 டி20 உலகக் கோப்பைத் தொடர் வரும் அக்டோபர் 16ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. இந்த உலகக் கோப்பையை வெல்லவேண்டுமானால் பாகிஸ்தான் அணி தங்கள் பேட்டிங்கிலும் பந்து வீச்சிலும் இருக்கும் பிரச்சனைகளை சரிசெய்யவேண்டும்

"நாம் இப்போது விளையாடிக்கொண்டிருக்கும் வகையான ஆடுகளங்களில் இரண்டு வேகப்பந்துவீச்சாளரும் ஒரு ஆல் ரவுண்டரும் நிச்சயம் தேவைப்படும்.

புதிதாக ஜமால் என்று ஒரு வீரரை எடுத்திருக்கிறார்கள். அவரை ஏன் விளையாடவைக்கக் கூடாது? அவர் என்ன மாதிரியான வீரர் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

பாகிஸ்தான் அணி இந்த உலகக் கோப்பையை வெல்லவேண்டும் என்று கனவு கண்டால், அவர்கள் பந்துவீச்சிலும் பேட்டிங்கிலும் பெரிய முன்னேற்றம் கான வேண்டும். இதுவரை செய்துவரும் தவறுகளை சரிசெய்யவேண்டும்" என்று கூறினார்.


Next Story