பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி மார்ச் மாதம் நடத்த முடிவு


பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி மார்ச் மாதம் நடத்த முடிவு
x

பெண்களுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த முடிவு செய்துள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் அதற்கான பணிகளில் முழுவீச்சில் இறங்கியுள்ளது.

மும்பை:

பெண்களுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த முடிவு செய்துள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் அதற்கான பணிகளில் முழுவீச்சில் இறங்கியுள்ளது. வழக்கமாக இந்தியாவில் பெண்களுக்கான உள்ளூர் கிரிக்கெட் சீசன் நவம்பர் மாதம் தொடங்கி ஏப்ரலில் முடிவடையும்.

ஆனால் இந்த முறை ஒரு மாதத்திற்கு முன்பாக அதாவது அக்டோபரில் பெண்களுக்கான 20 ஓவர் போட்டிகள் தொடங்கி பிப்ரவரியில் மண்டலங்களுக்கான ஒரு நாள் போட்டியுடன் நிறைவடையும் வகையில் போட்டி அட்டவணையை கிரிக்கெட் வாரியம் மாற்றம் செய்துள்ளது.

இதன் மூலம் அடுத்த ஆண்டு (2023) மார்ச் மாதம் பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த திட்டமிட்டு இருப்பது உறுதியாகியுள்ளது.

இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'பெண்கள் ஐ.பி.எல். போட்டி மார்ச் முதல் வாரத்தில் தொடங்கி 4 வாரங்கள் நடைபெறும். பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை போட்டி தென்ஆப்பிரிக்காவில் பிப்ரவரி 9-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடக்கிறது. அந்த போட்டி முடிந்ததும் பெண்கள் ஐ.பி.எல். தொடரை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

இப்போதைக்கு 5 அணிகளுடன் விளையாட முடிவு செய்துள்ளோம். ஆனால் நிறைய நிறுவனங்கள் இதில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவதால் இந்த எண்ணிக்கை 6 ஆக உயரலாம். அணிகள் மற்றும் ஏலம் விவரம் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்' என்றார்.


Next Story