பெண்கள் பிரிமீயர் லீக் - அதிக விலைக்கு ஏலம் போன ஆஸ்திரேலிய வீராங்கனை..!


பெண்கள் பிரிமீயர் லீக் - அதிக விலைக்கு ஏலம் போன ஆஸ்திரேலிய வீராங்கனை..!
x

Image : BCCI

தினத்தந்தி 9 Dec 2023 11:17 AM GMT (Updated: 9 Dec 2023 11:21 AM GMT)

பெண்கள் பிரிமீயர் லீக் ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

மும்பை,

பெண்கள் ஐ.பி.எல். எனப்படும் பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றன. முதலாவது டபிள்யூ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் கோப்பையை வென்றது.

2-வது டபிள்யூ.பி.எல். போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி- மார்ச்சில் நடத்தப்படுகிறது. இதையொட்டி வீராங்கனைகளின் மினி ஏலம் மும்பையில் இன்று நடைபெற்று வருகிறது. ஏலப்பட்டியலில் 104 இந்தியர்கள், 61 வெளிநாட்டினர் என்று மொத்தம் 165 வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். இவர்களில் 109 பேர் உள்ளூர் போட்டிகளில் மட்டும் ஆடியவர்கள்.

5 அணிகளுக்கும் சேர்த்து மொத்தம் 30 இடம் காலியாக உள்ளது. இதில் வெளிநாட்டினருக்கான 9 இடங்களும் அடங்கும். தற்போது ஏலம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை நடந்து முடிந்த ஏலத்தின் முடிவில் ஆஸ்திரேலிய வீராங்கனை அன்னபெல் சதர்லேண்டை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ரூ. 2 கோடிக்கு ஏலத்தில் வாங்கியுள்ளது.

இதனால் அன்னபெல் சதர்லேண்ட் நடப்பு ஏலத்தில் தற்போது வரை அதிக தொகைக்கு ஏலம் போன வீராங்கனையாக உள்ளார்.

மேலும் தென் ஆப்பிரிக்கா வீராங்கனை ஷப்னிம் இஸ்மாயிலை ரூ.1.2 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது.


Next Story