உலகக்கோப்பை தகுதிச்சுற்று; பால் ஸ்டிர்லிங் அபார சதம்...யுஏஇ-க்கு எதிராக அயர்லாந்து 349 ரன்கள் குவிப்பு...!

Image Courtesy: @ICC
உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன.
புலவாயே,
உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன. இதில் கலந்து கொண்ட 6 அணிகளில் இருந்து ஜிம்பாப்வே, நெதர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய 6 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறி உள்ளன.
இந்த தொடரின் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் இன்று நடைபெற்று வருகின்றன. இதில் ஒரு ஆட்டத்தில் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட அயர்லாந்து - யுஏஇ அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற யுஏஇ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து அயர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மெக்பிரைன், ஸ்டிர்லிங் ஆகியோர் களம் இறங்கினர். இதில் மெக்பிரைன் 24 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து களம் இறங்கிய பால்பிரின், ஹேரி டெக்டர் ஆகியோர் அரைசதமும், மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய பால் ஸ்டிர்லிங் 162 ரன்கள் அடித்தார்.
இறுதியில் அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 349 ரன்கள் குவித்தது. இதையடுத்து 350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் யுஏஇ அணி ஆட உள்ளது.






