உலக கோப்பை போட்டியுடன் அர்ஜென்டினா கால்பந்து வீரர் டி மரியா ஓய்வு பெற முடிவு


உலக கோப்பை போட்டியுடன் அர்ஜென்டினா கால்பந்து வீரர் டி மரியா ஓய்வு பெற முடிவு
x

உலக கோப்பை போட்டியுடன் அர்ஜென்டினா கால்பந்து வீரர் டி மரியா ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.

பியூனோஸ் அயர்ஸ்,

அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னணி வீரர்களில் ஒருவர் ஏஞ்சல் டி மரியா. அந்த அணிக்காக 121 சர்வதேச போட்டிகளில் விளையாடி 24 கோல்கள் அடித்துள்ளார். கடந்த ஆண்டு கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தி 28 ஆண்டுக்கு பிறகு இந்த கோப்பையை கைப்பற்றியது. இதில் வெற்றிக்குரிய கோலை அடித்தவர் டி மரியா தான்.

இந்த நிலையில் 34 வயதான ஏஞ்சல் டி மரியா, கத்தாரில் வருகிற நவம்பர்-டிசம்பரில் நடக்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டியுடன் சர்வதேச கால்பந்து போட்டிக்கு முழுக்கு போட முடிவு செய்துள்ளார். உலக கோப்பை முடிந்ததும் ஓய்வு பெறுவதற்கு அதுவே சரியான தருணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

டி மரியா பிரான்சை சேர்ந்த பி.எஸ்.ஜி. கால்பந்து கிளப்புக்காக விளையாடுகிறார். இந்த கோடைகால சீசனுடன் அந்த கிளப்பில் இருந்து வெளியேறும் அவர், அதன் பிறகு வேறு ஏதாவது கிளப் அணிக்காக ஆடுவாரா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.


Next Story