இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரிக்கு ஆண் குழந்தை...!!


இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரிக்கு ஆண் குழந்தை...!!
x

image courtesy; instagram/chetri_sunil11

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி- சோனம் பட்டாச்சார்யா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

புது டெல்லி,

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி முன்னாள் கால்பந்து வீரர் சுப்ரதா பட்டாச்சார்யாவின் மகள் சோனம் பட்டாச்சார்யாவை நீண்ட நாட்களாக காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் சோனம் கர்ப்பமாக இருப்பதை சேத்ரி கடந்த ஜூன் மாதம் நடந்த இன்டர்காண்டினென்டல் கோப்பை தொடரில் விளையாடும் போது அறிவித்திருந்தார். அதில் நடந்த ஒரு போட்டியில் சேத்ரி கோல் அடித்த பிறகு பந்தை எடுத்து சட்டைக்கு அடியில் வயிற்று பகுதியில் வைத்துக்கொண்டு சோனமை நோக்கி சைகை காட்டினார்.

மேலும் அந்த போட்டி முடிந்த பின் அளித்த பேட்டியில், "நானும் என் மனைவியும் ஒரு குழந்தையை எதிர்பார்க்கிறோம். இப்படித்தான் நான் அறிவிக்க வேண்டும் என்று சோனம் விரும்பினாள். அவளுக்கும் குழந்தைக்கும் எல்லாருடைய ஆசீர்வாதங்களும் வாழ்த்துக்களும் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்," என்று அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் சுனில் சேத்ரி- சோனம் பட்டாச்சார்யா தம்பதிக்கு பெங்களூருவில் நேற்று (வியாழக்கிழமை) ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை சோனத்தின் குடும்பத்தினர் மற்றும் மருத்துவமனை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். சோனம் மற்றும் பிறந்த குழந்தை இருவரும் நலமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனது குழந்தை பிறப்பிற்காக விளையாட்டிலிருந்து சிறிது ஓய்வு எடுத்துள்ள சேத்ரி, செப்டம்பரில் தாய்லாந்தில் நடைபெறவுள்ள கிங்ஸ் கோப்பை தொடரை தவறவிடுவார் என பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் கூறியுள்ளார். சேத்ரி இந்த மாத இறுதியில் சீனாவில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டு தொடரில் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story