ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து: காலிறுதி போட்டிகள் நாளை துவக்கம்


ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து: காலிறுதி போட்டிகள் நாளை துவக்கம்
x

Image Tweeted By @FIFAWWC

ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்தின் காலிறுதி சுற்று போட்டிகள் நாளை தொடங்குகிறது.

புவனேஷ்வர்,

ஜூனியர் (17 வயதுக்கு உட்பட்டோர்) பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி 2008-ம் ஆண்டு முதல் 2 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 7-வது ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் கடந்த 11-ஆம் தேதி தொடங்கியது. புவனேஷ்வர், கோவா, நவிமும்பை ஆகிய நகரங்களில் நடந்து வரும் இந்த தொடர் காலிறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

16 அணிகள் பங்கேற்று விளையாடிய இந்த தொடரில் லீக் சுற்றுகளின் முடிவில் 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. ஜூனியர் உலக கோப்பை தொடரில் முதல் முறையாக கால்பதித்த இந்திய அணி பங்கேற்ற 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

இந்த நிலையில் இந்த தொடரின் காலிறுதி சுற்று போட்டிகள் நாளை தொடங்குகிறது. நாளை நடைபெறும் முதல் காலிறுதி போட்டியில் அமெரிக்கா- நைஜீரியா அணிகள் (மாலை 4.30 மணி) பலப்பரீட்சை நடத்துகின்றன. இதை தொடர்ந்து இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில் ஜெர்மனி- பிரேசில் அணிகள் மோதுகின்றன.

இதை தொடர்ந்து நாளை மறுநாள் நடக்கும் போட்டியில் முதல் கொலம்பியா- தான்சனியா அணிகள் விளையாடுகின்றன. இறுதி காலிறுதி போட்டியில் ஜப்பான்- ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.


Next Story