இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி சர்வதேச கால்பந்தாட்டத்தில் கால்பதித்து 17 ஆண்டுகள் நிறைவு!


இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி சர்வதேச கால்பந்தாட்டத்தில் கால்பதித்து 17 ஆண்டுகள் நிறைவு!
x

17 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடும் வாய்ப்பை சுனில் சேத்ரி பெற்றார்.

புதுடெல்லி,

இந்தியாவில் கால்பந்தாட்டம் என்றால் அதன் ஹீரோவாக கருத்தப்பட்டவர் பைசுங் பூட்டியா. அவருக்கு பின்பு இப்போது பலராலும் பெரிதும் அறியப்படுபவர் சுனில் சேத்ரி. இந்திய கால்பந்தாட்டத்தை அடுத்தக் கட்டத்துக்கு அழைத்துச் சென்றதும், தன்னுடைய தனிப்பட்ட சாதனையாலும் தேசத்துக்கு பெருமை சேர்த்தவர் சுனில் சேத்ரி.

சர்வதேச அளவில் அதிக கோல்கள் அடித்த நடப்பு வீரர்கள் பட்டியலில், அர்ஜெண்டினா கால்பந்தாட்ட அணியின் கேப்டனும், பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரருமான லியோனல் மெஸ்ஸியினை முந்தியிருக்கிறார். இதன் மூலம் அதிக கோல்கள் அடித்த சர்வதேச நடப்பு வீரர்கள் வரிசையில் டாப்-10 இடத்திற்கு முன்னேறியிருக்கிறார் சுனில் சேத்ரி.

உலக அளவில் அதிக கோல் அடித்த நடப்பு வீரர்கள் பட்டியலில் போர்சுகல் நாட்டின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியனோ ரொனால்டோ மற்றும் அர்ஜெண்டினாவின் லயோனல் மெஸ்ஸி ஆகியோருக்கு அடுத்தபடியாக, சுனில் சேத்ரி 83 கோல்களுடன் 3 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

சுனில் சேத்ரி ஆந்திர மாநிலம் செகண்ட்ராபாதில் ஆகஸ்ட் மாதம் 3-ஆம் தேதி 1984 ஆம் ஆண்டு பிறந்தவர். அவரின் தந்தை கே.பி.சேத்ரி. இந்திய ராணுவத்தில் அதிகாரியாக வேலை செய்தவர். அவரது அம்மா சுசிலா சேத்ரி நேபாளத்தை சேர்ந்தவர். சேத்ரிக்கு கிரிக்கெட் தான் பிடித்தமான விளையாட்டு. சச்சின்தான் அவருக்கு பிடித்த வீரர். அதனால் அவரும் கிரிக்கெட்டில் சாதிக்க விரும்பி தன் பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியரை அணுகியுள்ளார். "கிரிக்கெட் கிட் கொண்டு வந்தால் பயிற்சி கொடுக்க தயார்" என சொல்லியுள்ளார் அந்த ஆசிரியர். ஆனால் கிரிக்கெட் கிட் வாங்க காசு இல்லாததால் எனது கிரிக்கெட் கனவை கலைத்து விட்டு கால்பந்தாட்டத்தில் கவனம் செலுத்தியாக சுனில் சேத்ரியே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

முதல் முறையாக சுனில் சேத்ரி 2001 இல் தாய்லாந்தில் நடைபெற்ற 'ஆசிய ஸ்கூல் சாம்பியன்ஷிப்' தொடரில் சேத்ரி ஸ்கோர் செய்த நான்கு கோல்கள் அவரது விளையாட்டு கெரியரில் திருப்புமுனையாக அமைந்தது. சேத்ரி மேற்குவங்கத்தின் புகழ்ப்பெற்ற 'மோகன் பகான்' கிளப் அணியில் விளையாடி தொழில்முறை கால்பந்தாட்ட வீரராக தன்னை தகவமைத்துக் கொண்டு இளையோருக்கான இந்திய கால்பந்தாட்ட அணியில் விளையாடவும் செய்தார். அப்படியே சீனியர் கல்பாந்தட்ட அணியில் மாற்று வீரராக இருபது வயதில் இணைந்தார்.

17 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில், பாகிஸ்தானுக்கு எதிரான நட்பு ரீதியிலான ஆட்டத்தில் இந்திய அணியின் அப்போதைய கேப்டன் பைசுங் பூட்டியா இல்லாததால் முன்கள வீரராக விளையாடும் வாய்ப்பை பெற்றார். பின்னர் இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக சேத்ரி உருவானார்.

பைசுங் பூட்டியாவின் ஓய்வுக்கு பிறகு இந்திய அணியை முன்னின்று வழிநடத்தி செல்லும் வாய்ப்பை பெற்றார் சேத்ரி. அவரது தலைமையில் பல முக்கியமான தொடர்களில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. சர்வதேச கால்பந்தாட்டத்தில் கால்பதித்து 17 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள சுனில் சேத்ரி, இன்னும் பல சாதனைகள் படைத்திட வாழ்த்துக்கள்!


Next Story