பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: போர்ச்சுகலை வீழ்த்தியது நெதர்லாந்து


பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: போர்ச்சுகலை வீழ்த்தியது நெதர்லாந்து
x

கோப்புப்படம்

பெண்களுக்கான 9-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடந்து வருகிறது.

டுனெடின்,

பெண்களுக்கான 9-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

4-வது நாளான நேற்று 3 லீக் ஆட்டங்கள் நடந்தன. இதில் டுனெடின் நகரில் நடந்த ஒரு ஆட்டத்தில் நெதர்லாந்து 1-0 என்ற கோல் கணக்கில் அறிமுக அணியான போர்ச்சுகலை (இ பிரிவு) வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது. 13-வது நிமிடத்தில் நெதர்லாந்தின் வான் டெர் கிராக்ட் தலையால் முட்டி கோலடித்தார். அதுவே இறுதியில் வெற்றி கோலாக மாறியது.

மற்றொரு ஆட்டத்தில் சுவீடன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் தென்ஆப்பிரிக்காவை (ஜி பிரிவு) தோற்கடித்தது. இதில் ஒரு கட்டத்தில் ஆட்டம் டிராவை நோக்கி நகர்ந்த நிலையில் கடைசி நிமிடத்தில் கார்னரில் இருந்து தூக்கியடிக்கப்பட்ட பந்தை சுவீடனின் அமன்டா இலெஸ்டெட் தலையால் முட்டி வலைக்குள் தள்ளி தங்கள் அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். பிரான்ஸ்- ஜமைக்கா (எப் பிரிவு) இடையிலான ஆட்டம் கோல் இன்றி டிராவில் முடிந்தது.

இன்றைய லீக் ஆட்டங்களில் இத்தாலி- அர்ஜென்டினா, ஜெர்மனி-மொராக்கோ, பிரேசில்- பனாமா அணிகள் மோதுகின்றன.


Next Story