அடிலெய்டு சர்வதேச டென்னிஸ்: ஆண்கள் இரட்டையர் இறுதிப்போட்டியில் ரோகன் போபண்ணா ஜோடி தோல்வி

Image Courtesy: @AdelaideTennis
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்குகிறது.
அடிலெய்டு,
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்குகிறது. இதற்கு முன்னோட்டமான அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டியில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதிஆட்டத்தில் பிரெஞ்ச் ஓபன் முன்னாள் சாம்பியனும், உலக தரவரிசையில் 12-வது இடத்தில் இருப்பவருமான லாத்வியா வீராங்கனை ஜெலினா ஆஸ்டாபென்கோ 6-3, 6-2 என்ற நேர்செட்டில் டாரியா கசட்கினாவை (ரஷியா) தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் செக்குடியரசு வீரர் ஜிரி லெஹக்கா 4-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் ஜாக் டிராப்பரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் ரோகன் போபண்ணா (இந்தியா)-மேத்யூ எப்டென் (ஆஸ்திரேலியா) ஜோடி 5-7, 7-5, 9-11 என்ற செட் கணக்கில் ராஜீவ் ராம் (அமெரிக்கா)-ஜோ சாலிஸ்புரி (இங்கிலாந்து) இணையிடம் தோற்று 2-வது இடம் பிடித்தது.






