ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: நோவக் ஜோகோவிச் அரையிறுதி சுற்றுக்கு தகுதி


ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: நோவக் ஜோகோவிச் அரையிறுதி சுற்றுக்கு தகுதி
x

Image Courtesy: AFP

இன்று நடந்த போட்டியில் ஜோகோவிச் (செர்பியா)- ஆண்ட்ரே ரூப்லெவ் (ரஷியா) மோதினர்.

துரின்,

ஆண்டின் இறுதியில் ஏ.டி.பி. இறுதிசுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஏ.டி.பி. இறுதி சுற்று உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் கடந்த 13 ஆம் தேதி தொடங்கியது.

குரூப் சுற்று நவம்பர் 18 வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் தரவரிசையில் டாப்-8 இடம் வகிக்கும் வீரர்கள் மட்டுமே பங்கேற்பார்கள். அவர்கள் இரு அணிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வீரரும் தங்கள் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். ' ரவுண்ட்-ராபின்' முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் வீரர்கள் அரைஇறுதிக்கு தகுதி பெறுவார்கள்.

அந்த வகையில் இந்த முறை நோவக் ஜோகோவிச், ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், ஆண்ட்ரே ரூப்லெவ் மற்றும் டேனியல் மெட்வெடேவ் ஆகியோர் 'ரெட்' பிரிவில் இடம்பெற்று உள்ளனர். 'கிரீன்' பிரிவில் ரபேல் நடால், காஸ்பர் ரூட், பெலிக்ஸ் ஆகர்-அலியாசிம் மற்றும் டெய்லர் பிரிட்ஸ் ஆகியோர் உள்ளனர்.

இந்த தொடரில் இன்று நடந்த போட்டியில் ஜோகோவிச் (செர்பியா)- ஆண்ட்ரே ரூபலெவ் (ரஷியா) மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஜோகோவிச் 6-4, 6-1 என்ற செட் கணக்கில் ரூபலெவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

இதில் நேற்று நடந்த போட்டியில் ஜோகோவிச் 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் சிட்சிபாஸை வீழ்த்தி வெற்றி பெற்று இருந்தார். இதனால் இன்றைய வெற்றியின் மூலம் அவர் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.


Next Story