மலேசிய ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதியில் பிரனாய் தோல்வி


மலேசிய ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதியில் பிரனாய் தோல்வி
x

மலேசிய ஓபன் பேட்மிண்டன் கால்இறுதியில் பிரனாய் தோல்வி அடைந்தார்.

கோலாலம்பூர்,

மலேசிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் கால்இறுதியில் இந்திய வீரர் எச்.எஸ். பிரனாய் 16-21, 21-19, 10-21 என்ற செட் கணக்கில் உலக தரவரிசையில் 7-வது இடம் வகிக்கும் ஜப்பானின் கோடாய் நராகாவிடம் போராடி தோல்வி அடைந்தார். இந்த ஆட்டம் 84 நிமிடங்கள் நீடித்தது.

நராகாவுக்கு எதிராக 3-வது முறையாக மோதிய பிரனாய் அனைத்திலும் தோல்வி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்த போட்டியில் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது. ஏற்கனவே சிந்து, சாய்னா நேவால், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட இந்தியர்கள் முதல் சுற்றுடன் நடையை கட்டி விட்டனர்.

ஆண்கள் இரட்டையர் பிரிவின் கால்இறுதியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரெங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி 17-21, 22-20, 21-9 என்ற செட் கணக்கில் உலக டூர் இறுதி சுற்று சாம்பியனான சீனாவின் லி யு சென்- ஓ ஸியான் யி இணைக்கு அதிர்ச்சி அளித்து அரைஇறுதிக்கு முன்னேறியது. 66 நிமிடங்களில் வெற்றியை சுவைத்த சாத்விக்-சிராக் ஷெட்டி அடுத்து சீனாவின் லியாங் வெய் கெங்- வாங் சாங் ஆகியோரை சந்திக்கிறார்கள்.


Next Story