ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: சிட்சிபாஸிடம் வீழ்ந்தார் மெத்வதேவ்


ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: சிட்சிபாஸிடம் வீழ்ந்தார் மெத்வதேவ்
x

Image Courtesy: AFP

இன்று நடந்த முக்கிய போட்டி ஒன்றில் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ்- டேனில் மெட்வதேவ் மோதினர்.

துரின்,

உலக தரவரிசையில் முன்னணியில் இருக்கும் டாப்-8 வீரர்கள் மட்டும் பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்கள் ரெட், கிரீன் என்று இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் இந்த முறை நோவக் ஜோகோவிச், ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், ஆண்ட்ரே ரூப்லெவ் மற்றும் டேனில் மெட்வதேவ் ஆகியோர் 'ரெட்' பிரிவில் இடம்பெற்று உள்ளனர். 'கிரீன்' பிரிவில் ரபேல் நடால், காஸ்பர் ரூட், பெலிக்ஸ் ஆகர்-அலியாசிம் மற்றும் டெய்லர் பிரிட்ஸ் ஆகியோர் உள்ளனர்.

ஒவ்வொரு பிரிவில் உள்ள வீரர்கள், தங்கள் பிரிவில் உள்ள மற்ற வீரர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் வீரர்கள் அரைஇறுதிக்கு தகுதி பெறுவார்கள்.

இந்த தொடரில் இன்று நடந்த முக்கிய போட்டி ஒன்றில் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் (கிரிஸ்)- டேனியல் மெட்வதேவ் மோதினர். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் சிட்சிபாஸ் 6-3, 6-7 (11-13), 7-6 (7-1) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று மெட்வதேவுக்கு அதிர்ச்சி அளித்தார். நாளை மறுதினம் நடைபெறும் போட்டியில் சிட்சிபாஸ், ஆண்ட்ரே ரூப்லெவை எதிர்கொள்கிறார்.


Next Story