ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: வெற்றியுடன் வெளியேறினார் ரபெல் நடால்


ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: வெற்றியுடன் வெளியேறினார் ரபெல் நடால்
x

Image Courtesy: AFP

குரூப் சுற்றில் தனது கடைசி ஆட்டத்தில் முதல் வெற்றியை பெற்று இந்த தொடரை நடால் நிறைவு செய்துள்ளார்.

துரின்,

உலக தரவரிசையில் முன்னணியில் இருக்கும் டாப்-8 வீரர்கள் மட்டும் பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்கள் ரெட், கிரீன் என்று இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் இந்த முறை நோவக் ஜோகோவிச், ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், ஆண்ட்ரே ரூப்லெவ் மற்றும் டேனில் மெட்வதேவ் ஆகியோர் 'ரெட்' பிரிவில் இடம்பெற்று உள்ளனர். 'கிரீன்' பிரிவில் ரபேல் நடால், காஸ்பர் ரூட், பெலிக்ஸ் ஆகர்-அலியாசிம் மற்றும் டெய்லர் பிரிட்ஸ் ஆகியோர் உள்ளனர்.

ஒவ்வொரு பிரிவில் உள்ள வீரர்கள், தங்கள் பிரிவில் உள்ள மற்ற வீரர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் வீரர்கள் அரைஇறுதிக்கு தகுதி பெறுவார்கள்.

இந்த நிலையில் 'கிரீன்' பிரிவில் இன்று நடந்த ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்) 7-5, 7-5 என்ற நேர்செட்டில் காஸ்பர் ரூட்டை வீழ்த்தி வெற்றி பெற்றார். முதலாவது ஆட்டத்தில் டெய்லர் பிரைட்ஸ்சிடம் தோல்வி கண்டு இருந்த நடால் நேற்று முன்தினம் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள கனடா வீரர் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம்மிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்து இருந்தார். இந்த நிலையில் குரூப் சுற்றில் தனது கடைசி ஆட்டத்தில் முதல் வெற்றியை பெற்று இந்த தொடரை நடால் நிறைவு செய்துள்ளார்.


Next Story