சோயிப் மாலிக்-சானியா மிர்சா பிரிவுக்கு காரணம் கள்ளக்காதலா?


சோயிப் மாலிக்-சானியா மிர்சா பிரிவுக்கு காரணம் கள்ளக்காதலா?
x
தினத்தந்தி 21 Jan 2024 10:24 AM GMT (Updated: 21 Jan 2024 10:58 AM GMT)

பாகிஸ்தான் சின்னத்திரை நடிகையான சனா ஜாவேத்தை சோயிப் மாலிக் மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார்.

இஸ்லாமாபாத்,

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவை சேர்த்து மொத்தம் 6 சாம்பியன் பட்டங்களை வென்றவரும், இரட்டையர் பிரிவில் நம்பர் ஒன் இடத்தை அலங்கரித்தவருமான இந்திய டென்னிஸ் நட்சத்திர வீராங்கனையான சானியா மிர்சா, கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனுமான சோயிப் மாலிக்கை காதல் திருமணம் செய்தார். எல்லைக் கடந்த இந்த காதல் திருமணம் சர்ச்சைக்கும், எதிர்ப்புக்கும் மத்தியில் சானியா மிர்சாவின் சொந்த ஊரான ஐதராபாத்தில் நடந்தது.

சானியா-சோயிப் தம்பதியினர் துபாயில் வசித்தனர். இவர்களுக்கு இஷான் மிர்சா மாலிக் என்ற 5 வயது மகன் உள்ளார். சோயிப் மாலிக், பாகிஸ்தானை சேர்ந்த பிரபல நடிகையுடன் நெருங்கி பழகியதை அடுத்து உறவில் விரிசல் ஏற்பட்டு ஒரு ஆண்டுக்கு மேலாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக செய்திகள் கசிந்தன. ஆனால் அது குறித்து இருவரும் எதுவும் வாய் திறக்கவில்லை.

இந்தநிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் சோயிப் மாலிக் 3வது திருமணம் செய்துள்ளார்.

பாகிஸ்தான் சின்னத்திரை நடிகையான சனா ஜாவேத்தை அவர் கரம்பிடித்துள்ளார். இதுதொடர்பான போட்டோக்களை அவர்கள் இன்ஸ்டாவில் வெளியிட்டு தங்களின் திருமணத்தை வெளியுலகிற்கு தெரிவித்துள்ளனர். இதற்கிடையேதான் பலருக்கும் சானியா மிர்சா-சோயிப் மாலிக் தம்பதி விவாகரத்து செய்து கொண்டார்களா? இல்லையா? என்பது தொடர்பான கேள்விகள் எழுந்துள்ளன.

இதற்கு சானியா மிர்சாவின் குடும்பத்தினர் பதிலளித்துள்ளனர். இதுதொடர்பாக அவர் இன்ஸ்டாவில் பதிவு வெளியிட்டுள்ளனர். மிர்சா குடும்பம் மற்றும் சானியா குழு என்ற பெயரில் இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில் "சானியா எப்போதுமே தனது தனிப்பட்ட வாழ்க்கையை மக்கள் பார்வையில் இருந்து விலக்கி வைத்திருக்கிறார். சோயிப்பும், அவரும் விவாகரத்து பெற்று கொண்டது தொடர்பான தகவலை இன்று பகிர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

சோயிப்பின் புதிய பயணத்துக்கு சானியா மிர்சா வாழ்த்தியுள்ளார். சானியாவின் இந்த முக்கியமான காலக்கட்டத்தில் ரசிகர்கள், நலம் விரும்பிகள் யூகங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும். அவரது பிரைவேசியை மதிக்கும்படி கேட்டு கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சோயிப் மாலிக்-சானியா மிர்சா ஆகியோர் சில விவாகரத்து பெற்று கொண்டது உறுதியாகி உள்ளது.

அதேபோல் சானியா மிர்சா மற்றும் சோயிப் மாலிக் ஆகியோரின் பிரிவுக்கு என்ன காரணம் என்ன? என்பது பற்றிய தகவலும் வெளியாகி உள்ளது. அதாவது சோயிப் மாலிக்கு திருமணத்தை மீறிய உறவில் (கள்ளக்காதல்) இருந்துள்ளார். இதனை அவர் கைவிடவில்லை. இதில் சானியா மிர்சா மிகவும் பாதிப்படைந்ததாக சோயிப் மாலிக்கின் சகோதரி தெரிவித்துள்ளார். இதனால், கள்ளக்காதல்தான் இருவரின் பிரிவுக்கும் முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

மேலும் சோயிப் மாலிக்கின் இந்த திருமணத்தை அவரது குடும்பத்தினர் விரும்பவில்லை. இதனால் சோயிப் மாலிக்-சனா ஜாவேத் திருமணத்தில் குடும்பத்தினர் யாரும் பங்கேற்கவில்லை என பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கிடையேதான் சானியா மிர்சாவை விட்டு பிரிந்த சோயிப் மாலிக்கை ரசிகர்கள் வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

சோயிப் மாலிக் மட்டுமின்றி சனா ஜாவேத்துக்கும் இது மறுமணமாகும். நடிகை சனா ஜாவித் 2020-ம் ஆண்டு பாடகர் உமைர் ஜெய்ஸ்வாலை திருமணம் செய்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விவாகரத்து செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story