உக்ரைன் குழந்தைகளின் கல்விக்கு ரோஜர் ஃபெடரெர் 5 லட்சம் டாலர் நிதியுதவி


உக்ரைன் குழந்தைகளின் கல்விக்கு ரோஜர் ஃபெடரெர் 5 லட்சம் டாலர் நிதியுதவி
x
தினத்தந்தி 19 March 2022 3:48 PM GMT (Updated: 19 March 2022 3:49 PM GMT)

போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டின் குழந்தைகள் கல்வியைத் தொடர ரோஜர் ஃபெடரெர் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

பேர்ன்,

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் ஃபெடரெர், குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட சமூக உதவிகளுக்காக ‘ரோஜர் ஃபெடரர் ஃபவுண்டேஷன்’ என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் நாடுகளில் உள்ள குழந்தைகளின் கல்விக்காக இந்த தொண்டு நிறுவனம் மூலம் அவர் உதவி செய்து வருகிறார்.

இந்த நிலையில் உக்ரைனில் நடைபெற்று வரும் போரால் அந்நாட்டில் உள்ள குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க ரோஜர் ஃபெடரர் உதவிக்கரம் நீட்டியுள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், உக்ரைனில் இருந்து வெளிவரும் புகைப்படங்களைப் பார்த்து தானும், தனது குடும்பத்தினரும் பேரதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார். 

உக்ரைனில் அமைதி நிலவ வேண்டும் என வலியுறுத்திய அவர், உக்ரைன் குழந்தைகள் கல்வியைத் தொடர தனது தொண்டு நிறுவனம் மூலம் 5 லட்சம் டாலர்(இந்திய மதிப்பில் சுமார் 3.79 கோடி ரூபாய்) நிதியுதவி வழங்க இருப்பதாக அவர் அறிவித்துள்ளார். 

Next Story