ஐபிஎல் கிரிக்கெட்: டோனி அரைசதம், கொல்கத்தாவுக்கு 132 -ரன்கள் வெற்றி இலக்கு


Photo Credit: Twitter/@chennaiipl
x
Photo Credit: Twitter/@chennaiipl
தினத்தந்தி 26 March 2022 3:51 PM GMT (Updated: 26 March 2022 3:57 PM GMT)

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய டோனி அரைசதம் அடித்து அசத்தினார்

மும்பை,

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டில் உதயமானது. ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ள இந்த ‘சரவெடி’ ஆட்டம் ஆண்டுதோறும் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்படுகிறது. இதன்படி 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் இன்று தொடங்கியது. 

2022- ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டத்தில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. சென்னை அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ரன் எதுவும் இன்றி ஆட்டமிழந்து  ஏமாற்றம் அளித்தார்.  மற்றொரு வீரர்  கான்வேயும் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். 

ஓரளவு அதிரடி காட்டிய உத்தப்பா 28 ரன்களில் வருண்சக்கரவர்த்தி பந்தில் ஆட்டமிழந்தார். அம்பத்தி ராயுடு 15 ரன்களில் ரன் அவுட் ஆனார்.   ஒருமுனையில் ஜடேஜா பொறுமையுடன் விளையாடி வந்தார். 

ஷிவம் துபே 3 ரன்களில் வெளியேறினார். 7 -வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய டோனி, துவக்கத்தில் மிகவும் மந்தமாக ஆடினார். இதனால், சென்னை அணியின் ரன்வேகம் நத்தை வேகத்தில் சென்றது. 

இருப்பினும் கடைசி கட்ட ஓவர்களில் டோனி அதிரடி காட்டி ரசிகர்களை மகிழ்வித்தார். இதனால், சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 131  ரன்கள் எடுத்துள்ளது.  டோனி  38  பந்துகளில்  50  ரன்களுடனும் ஜடேஜா  28 பந்துகளில் 26 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.  இதையடுத்து 132 வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்துவருகிறது. 

Next Story