'சாதிக்க வேண்டும் என்பதற்காக 9 வருடங்களாக வீடு திரும்பவில்லை'- மும்பை வீரர் உருக்கம்


Image Courtesy : Twitter @IPL
x
Image Courtesy : Twitter @IPL
தினத்தந்தி 1 May 2022 6:37 AM GMT (Updated: 1 May 2022 6:38 AM GMT)

நேற்றைய போட்டியில் மும்பை அணியின் வெற்றிக்கு உதவிய இளம் வீரர் உருக்கமாக பேசியுள்ளார்.

மும்பை ,

15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. மும்பை டி.ஓய்.பட்டீல் மைதானத்தில் நேற்று  நடைபெற்ற  44-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள்  மோதின .

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 158  ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய மும்பை அணி 19.2  ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதன் மூலம் நடப்பு தொடரில் தங்கள் முதல் வெற்றியை மும்பை அணி 9-வது போட்டியில் பதிவு செய்துள்ளது. இந்த போட்டியில் மும்பை அணிக்காக தனது முதல் போட்டியில் இந்திய வீரர் குமார் கார்த்திகேயா பங்கேற்றார். 

4 ஓவர்கள் வீசிய அவர் 19 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார். அதுவும் அவர் கைப்பற்றியது ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் விக்கெட்டாகும்.

இந்த போட்டி முடிந்த பிறகு பேசிய குமார் கார்த்திகேயா கூறும் போது, " நான் முதல் போட்டியை விளையாட போவது தெரிந்ததும் கொஞ்சம் பதட்டமாக இருந்தது. ஆனால் ஒவ்வொரு வீரருக்கும் ஒரே இரவில் திட்டமிட்டேன்.

சாம்சனுக்கு அவரது கால்களில்  வீச முயற்சித்தேன். சச்சின் சார் எனக்கு அறிவுரை கூறியது எனக்கு பெரிய நம்பிக்கை அளித்தது" என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், "நான் 9 ஆண்டுகளாக வீட்டிற்கு செல்லவில்லை. வாழ்க்கையில் ஏதாவது சாதித்தால்தான் வீடு திரும்ப வேண்டும் என்று முடிவு செய்தேன். 

என் அம்மாவும் அப்பாவும் என்னை அடிக்கடி அழைத்தார்கள், ஆனால் நான் உறுதியாக இருந்தேன். இப்போது இறுதியாக நான் ஐபிஎல் முடிந்து வீடு திரும்ப உள்ளேன் " என கூறினார்.

Next Story