காஷ்மீர் பிரச்சினை குறித்து விரைவான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் பிரதமர் மோடியிடம் பரூக் அப்துல்லா வலியுறுத்தல்

காஷ்மீர் பிரச்சனை குறித்து விரைவான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் பரூக் அப்துல்லா வலியுறுத்தினார்.

Update: 2017-05-09 15:11 GMT
புதுடெல்லி,

காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகர் பாராளுமன்ற தொகுதியில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில், முன்னாள் முதல்–மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா வெற்றி பெற்றார். இவர் தனக்கு அடுத்தபடியாக வந்த பா.ஜனதா, மக்கள் ஜனநாயக கட்சி கூட்டணி வேட்பாளர் நாசர் அகமதுவை 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

இந்த நிலையில் பரூக் அப்துல்லா டெல்லி சென்றார்.

அங்கு அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரை மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.

இந்த சந்திப்பின்போது, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் நிலவுகிற அமைதியற்ற சூழல் குறித்து, பிரதமர் மோடியிடம் அவர் விளக்கினார்.

‘‘காஷ்மீர் பிரச்சினை வெறும் சட்டம்–ஒழுங்கு பிரச்சினை மட்டுமல்ல, இதற்கு அரசியல் தீர்வு காண விரைவான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்’’ என்றும் அவர் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினார்.

மேலும் செய்திகள்