12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை மத்திய அமைச்சரவை ஒப்புதல்

12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை என்ற அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. #pmmodi

Update: 2018-04-21 08:47 GMT
புதுடெல்லி

வட மாநிலங்களில் சிறுமிகள் கற்பழிப்பு சம்பவம் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் காஷ்மீரில் 8 வயது சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதேபோல் உத்தர பிரதேசத்தில் உன்னாவ் பகுதியில் 18 வயது சிறுமி கற்பழிப்பு விவகாரத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ. மீது புகார் கூறிய தந்தை போலீஸ் நிலையத்தில் மர்மமான முறையில் இறந்தார்.

சிறுமிகள் கற்பழிப்பு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணையின் போது மத்திய அரசின் சார்பில் வக்கீல் ஆஜராகி, 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழிக்கும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்றும், இதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கும் என்றும் தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து மரண தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

5 நாட்கள் வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி இன்று காலை டெல்லி திரும்பினார். உடனடியாக அவர் மத்திய மந்திரி சபையின் அவசர கூட்டத்தை கூட்டினார். இதில் அனைத்து மத்திய மந்திரிகளும் கலந்து கொண்டனர்.

12 வயதிற்குட்பட்ட சிறுமிகள் பாலியன் வன்கொடுமை செய்தால் சிறுவர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் (போக்சோ)  தூக்கு தண்டனை  விதிப்பது தொடர்பான அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.

மேலும் செய்திகள்