நாட்டு நலனுக்காக பாரதிய ஜனதா அரசு கண்டிப்பாக அகற்றப்பட வேண்டும்: காங்கிரஸ்
நாட்டு நலனுக்காக பாரதிய ஜனதா அரசு கண்டிப்பாக அகற்றப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்து உள்ளது. #Congress
புதுடெல்லி,
நாட்டு நலனுக்காக பாரதிய ஜனதா அரசு கண்டிப்பாக அகற்றப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆன்ந்த் சர்மா டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 2014-ஆம் ஆண்டில் மோடி தலைமையிலான அரசு மத்தியில் ஆட்சி அமைத்தது. அப்போது முதல் அவர் காங்கிரஸையும், இதர எதிர்க்கட்சிகளையும் எதிரியாகவே எண்ணி செயல்பட்டு வருகிறார். பாஜக அரசின் மோசமான நிர்வாகத்தால் நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துவிட்டது.
தாம் ஆட்சியைவிட்டு நீக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் எண்ணுவதாக மோடி புகார் சொல்லக் கூடாது. தேச நலனை கருத்தில் கொண்டு, அவரது தலைமையிலான அரசை நீக்குவதற்கே எதிர்க்கட்சிகள் பாடுபட்டு வருகிறது. எதிர்க்கட்சிகளுக்கு மோடி அறிவுரை கூறிக் கொண்டு இருக்கக் கூடாது. அவர் மீது வைத்திருந்த நம்பிக்கை பொய்த்துவிட்டது. பாஜக அரசை ஆட்சியைவிட்டு நீக்குவதற்காக ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைவதில் தவறில்லை” இவ்வாறு அவர் தெரிவித்தார்.