தெலுங்கானா பேருந்து விபத்து ஓட்டுனர் கடந்த மாதம் சிறந்த ஓட்டுனருக்கான அரசு விருது பெற்றவர்

தெலுங்கானாவில் விபத்தில் சிக்கிய பேருந்தின் ஓட்டுனர் கடந்த மாதம் சிறந்த ஓட்டுனருக்கான விருது பெற்றவர் என தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2018-09-12 14:07 GMT
ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ஜகித்யாலா மாவட்டத்தில் உள்ள கொண்டகட்டு என்ற இடத்தில் இருந்து ஜகித்யாலாவுக்கு அம்மாநில அரசு போக்குவரத்து பஸ் ஒன்று நேற்று காலை சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் பெத்த பல்லி, ராம்சாகர், ஹிம்மத்பேட்டா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பெண்கள், முதியோர், மாணவர்கள் என சுமார் 80 பேர் பயணித்தனர்.

அவர்களில் கொண்டகட்டு பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பும் பக்தர்களும் பெரும்பாலானோர் இருந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் பலர் நின்றுகொண்டே பயணித்தனர். காலை 11 மணி அளவில் வளைவுகள் நிறைந்த கொண்டகட்டு மலைப்பாதையில் பஸ் சென்றுகொண்டிருந்தது.

இன்னும் சில நிமிடங்களில் மலைப்பாதையில் இருந்து பஸ் சமதளத்துக்கு வரவிருந்த நிலையில் எதிர்பாராத விபத்து நடந்தது. கடைசி வளைவு அருகே வந்தபோது எதிரே வந்த ஒரு ஆட்டோ மீது மோதாமல் இருக்க பஸ்சை டிரைவர் அதே வேகத்தில் பக்கவாட்டில் இருந்த வேகத்தடை மீது ஏற்றினார்.

இதில் பஸ் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறியது. பக்கவாட்டில் இருந்த 30 அடி பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 4 முறை உருண்டு நின்றது. இதில் பஸ்சில் இருந்த பயணிகளில் 57 பேர் பலியாகினர்.  28 பேர் காயமடைந்தனர்.  இந்நிலையில் காயமடைந்த பெண் இன்று மரணமடைந்த நிலையில் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்ந்தது.

இவர்களில் 37 பேர் பெண்கள்.  5 பேர் குழந்தைகள்.  விபத்து நடந்த பேருந்து ஓட்டுனர் ஸ்ரீனிவாஸ் உயிரிழந்து விட்டார்.  இவர் கடந்த மாதம் சிறந்த ஓட்டுனருக்கான அரசு விருது பெற்றவர்.  திறமையாக பேருந்து ஓட்டுவதுடன் எரிபொருள் சேமிப்பிற்காகவும் இதற்கு முன்பு கவுரவிக்கப்பட்டவர் என தகவல் தெரிவிக்கின்றது.

மேலும் செய்திகள்