'கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்; முன்கூட்டியே நடந்திருக்க வேண்டும்' - சசி தரூர்

கெஜ்ரிவாலுக்கு முன்கூட்டியே இடைக்கால ஜாமீன் கிடைத்திருக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-10 16:48 GMT

புதுடெல்லி,

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தன் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கெஜ்ரிவாலுக்கு வரும் ஜூன் 1-ந்தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து சுமார் 50 நாட்கள் திகார் சிறையில் இருந்த கெஜ்ரிவால் இன்று ஜாமீனில் வெளியே வந்தார். அவரை ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

இந்நிலையில் கெஜ்ரிவாலுக்கு முன்கூட்டியே இடைக்கால ஜாமீன் கிடைத்திருக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைத்திருப்பது நல்ல முன்னேற்றம். ஆனாலும் இது முன்கூட்டியே நடந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். தேர்தல் பிரசாரம் நடக்கும் சமயத்தில், ஒரு மாநில முதல்-அமைச்சரை கைது செய்வதற்கான எந்த அதிகார வரம்பும் கிடையாது.

தற்போது விசாரணைதான் நடந்து கொண்டிருக்கிறது. இந்த விசாரணையை ஜூன் 4-ந்தேதிக்குப் பிறகு நடத்தியிருக்கலாம். இதனை சுப்ரீம் கோர்ட்டு உணர்ந்து கொண்டு அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இருப்பினும் இது முன்கூட்டியே நடக்காததால், கெஜ்ரிவால் நீண்ட நாட்களாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடியாமல் போய்விட்டது."

இவ்வாறு சசி தரூர் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்