தெலுங்கானாவில் வனத்துறை பெண் அதிகாரியை தாக்கிய எம்.எல்.ஏ.வின் சகோதரர் கைது

தெலுங்கானாவில் வனத்துறை பெண் அதிகாரியை தாக்கிய எம்.எல்.ஏ.வின் சகோதரர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-06-30 19:31 GMT
ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ஆசிபாபாத் மாவட்டம் சரசலா கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் மரக்கன்றுகள் நடுவதற்காக வனத்துறை பெண் அதிகாரி அனிதா சென்றார்.

அப்போது அங்கு வந்த தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி எம்.எல்.ஏ. கொனேரு கண்ணப்பாவின் சகோதரர் கொனேரு கிருஷ்ணா, தனக்கு சொந்தமான நிலத்தில் மரக்கன்றுகள் நடக்கூடாது எனக்கூறி வாக்குவாதம் செய்தார்.

பின்னர் அவர், வனத்துறை பெண் அதிகாரி அனிதாவை மூங்கில் கம்பால் சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் டிராக்டரில் ஏறி அங்கிருந்து தப்பிச்சென்றார். பின்னர் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொனேரு கிருஷ்ணாவை கைது செய்தனர்.

கொன்னேரு கிருஷ்ணா சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஆசிபாபாத் ஜில்லா பரிஷத்தின் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்