உத்தரபிரதேசத்தில் பயங்கரம்: நிலத்தகராறில் துப்பாக்கியுடன் மோதல் - 9 பேர் பலி

உத்தரபிரதேச மாநிலத்தில் நிலத்தகராறு காரணமாக துப்பாக்கியுடன் மோதிக்கொண்டதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2019-07-17 12:09 GMT
லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் சோன்பந்திரா மாவட்டம் கோரவால் பகுதியில் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு சொந்தமான நிலம் இருந்தது. அந்த நிலத்தை அவர் கிராமத் தலைவர் யோக்யா தத்துக்கு விற்றார்.

இந்தநிலையில் அந்த இடத்தை சீரமைக்கும் முயற்சியில் யோக்யா தத் இறங்கினார். 10-க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் உறவினர்களுடன் அந்த இடத்திற்கு யோக்யா தத் வந்தார். அப்போது நிலத்தை கையகப்படுத்துவதற்கு அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த கிராமத் தலைவரின் உறவினர்கள் துப்பாக்கியை காட்டி கிராம மக்களை மிரட்டினர். இதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. மேலும் அவர்கள் மக்களை நோக்கி துப்பாக்கியாலும் சுட்டனர். இந்த மோதலில் 3 பெண்கள் உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 19 பேர் காயம் அடைந்தனர்.

இந்த வழக்கை தனிப்பட்ட முறையில் கண்காணித்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யுமாறு டி.ஜி.பி.க்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்