மணிப்பூரில் குண்டுவெடித்து எல்லை பாதுகாப்பு வீரர்கள் 3 பேர் காயம்

மணிப்பூரில் குண்டுவெடித்து எல்லை பாதுகாப்பு வீரர்கள் 3 பேர் காயமடைந்தனர்.

Update: 2019-11-03 20:15 GMT
இம்பால்,

மணிப்பூரில் அரசுக்கும், நாகா பயங்கரவாதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் பதற்றம் நிலவி வருகிறது. எனவே அங்கு ஏராளமான பாதுகாப்பு படையினரும், போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில் அங்குள்ள டெலிபதி கிராமத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென வெடிகுண்டு ஒன்று வெடித்தது. இதில் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த 3 வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்