”யாரும் பசியில் இருக்கக் கூடாது”ஏழைகள், தொழிலாளர்களுக்கு மத்திய அரசு உதவி -நிர்மலா சீதாராமன்

யாரும் பசியில் இருக்கக் கூடாது என்பதற்காக ஏழைகள், தொழிலாளர்களுக்கு மத்திய அரசு உதவி வழங்க உள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

Update: 2020-03-26 09:07 GMT
படம் :ANI
புதுடெல்லி

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு மத்திய அரசு சார்பில் சுமார் 1.70 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உதவிகள் வழங்கப்படும்

நாடு தழுவிய ஊரடங்கால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், விதவைகள், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்படும்

விவசாயிகளுக்கு கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் உடனடியாக 2000 ரூபாய் வழங்கப்படும். 8.69 கோடி விவசாயிகள் இதன் மூலம் நேரடியாக பயன்பெறுவர்.

பதிவு செய்த 3.5 கோடி கட்டிடம் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க  அவர்களின் நல நிதியை (ரூ .31,000 கோடி) பயன்படுத்துமாறு மத்திய அரசு மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது .

100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட  சம்பளம் 182 ரூபாயிலிருந்து ரூ.202 ஆக உயர்த்தப்படும்.

உஜ்வலா திட்டத்தில் கேஸ் சிலிண்டர் பெற்ற சுமார் 8 கோடி குடும்பத்திற்கு 3 சிலிண்டர்கள் இலவசம்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அடமானம் எதுவும் இல்லாமல் 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்

முதலாளி மற்றும் பணியாளர் ஆகிய இரு நிறுவனங்களின் பணியாளர் வருங்கால வைப்பு நிதி (ஈபிஎஃப்) பங்களிப்பை இந்திய அரசு செலுத்தும், இது 24 சதவீதமாக இருக்கும், இது அடுத்த 3 மாதங்களுக்கு இருக்கும்

வருங்கால வைப்பு நிதியில் 75% திரும்பியளிக்கத்தேவையில்லாத தொகையை பெற்றுக்கொள்ளும் வசதியின் மூலம் 4.8 கோடி ஊழியர்கள் பலனடைவர் என கூறினார்.
 
நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியதாவ்து:-

80 கோடி மக்களுக்கு அடுத்த 3 மாதத்திற்கு கூடுதலாக தலா 5 கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் அடுத்த 3 மாதத்திற்கு தலா 1 கிலோ பருப்பு விலையில்லாமல் வழங்கப்படும் என கூறினார்.

மேலும் செய்திகள்