டெல்லியில் கடந்த வாரத்தை விட கொரோனா பரவல் சற்று குறைந்தது - முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லியில் கடந்த வாரத்தை விட கொரோனா பரவல் சற்று குறைந்துள்ளது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்று, இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மூன்றாவது இடத்தில் உள்ள டெல்லியில்,2,625 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், டெல்லியில் கடந்த வாரத்தை விட கொரோனா பரவல் சற்று குறைந்துள்ளது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். கெஜ்ரிவால் கூறுகையில்,” டெல்லி அரசு மத்திய அரசின் சமீபத்திய வழிகாட்டுதல்களுடன் இணைந்துள்ளது. சந்தைகள், வணிக வளாகங்கள் என எதுவும் தற்போது மீண்டும் திறக்கப்படாது. கட்டுப்பாட்டு மண்டலங்களில் தற்போது உள்ள நடைமுறையே பின்பற்றப்படும்.
குடியிருப்பு பகுதிகளில் உள்ள அண்டைக் கடைகள் மட்டுமே திறக்கப்படும். இந்த கட்டுப்பாடுகள் மே 3 வரை அதாவது இரண்டாவது முழு ஊரடங்கு நடவடிக்கை காலகட்டம் வரை தொடரும்.டெல்லியில் கடந்த வாரத்தை விட கொரோனா பரவல் சற்று குறைந்தது” என்றார்.