குஜராத்தில் காங்கிரஸ் எம்.பி. நரன் ரத்வா பா.ஜ.க.வில் இணைந்தார்

நரன் ரத்வா 5 முறை மக்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Update: 2024-02-27 10:33 GMT

காந்திநகர்,

குஜராத் மாநிலத்தின் மாநிலங்களவை எம்.பி.யும், முன்னாள் மத்திய மந்திரியுமான நரன் ரத்வா இன்று பா.ஜ.க.வில் இணைந்தார். அவரது பதவிக்காலம் ஏப்ரல் மாதம் வரை இருக்கும் நிலையில் தற்போது தனது மகன் சங்கராம் சிங் மற்றும் கட்சி ஆதரவாளர்களுடன் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். பா.ஜ.க. மாநில தலைமை அலுவலகத்தில் அம்மாநில பா.ஜ.க. தலைவர் சி.ஆர். பாட்டில் தலைமையில் நரன் ரத்வா இணைந்தார். பா.ஜ.க.வில் இணைவதற்கு முன்பு தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகாஜுன் கார்கேக்கு அனுப்பி வைத்துள்ளார்.

சோட்டோ உதேப்பூரில் பழங்குடியின தலைவரான நரன் ரத்வா 5 முறை மக்களவை எம்.பி.யாக இருந்துள்ளார். முதன்முறையாக 1989-ம் ஆண்டு மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். அதன்பின் 1991, 1996, 1998 மற்றும் 2004-ல் மக்களவை எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர்.

ரத்வாவின் மகன் 2022 குஜராத் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் சோட்டா உதேப்பூர் பழங்குடியின தொகுதியில் (ST) போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

2004-ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது ரத்வா ரெயில்வே துணை மந்திரியாக இருந்தவர். 2009-ல் நடைபெற்ற தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் ராம்சின் ரத்வாவிடம் தோல்வியடைந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்