ஈரான் சிறைபிடித்த கப்பலில் இருந்த இந்திய பெண் தாயகம் திரும்பினார்

ஈரான் - இஸ்ரேல் இடையே மோதல் முற்றியுள்ள சூழ்நிலையில் இஸ்ரேலுடன் தொடர்புடைய எம்எஸ்சி ஏரீஸ் என்ற சரக்கு கப்பலை ஈரானின் கடற்படை சிறை பிடித்தது.

Update: 2024-04-18 14:08 GMT

புதுடெல்லி,

ஈரான் சிறைபிடித்த கப்பலில் இருந்த இந்திய பெண் தாயகம் திரும்பினார்ஈரான் - இஸ்ரேல் இடையே மோதல் முற்றியுள்ள சூழ்நிலையில் இஸ்ரேலுடன் தொடர்புடைய எம்எஸ்சி ஏரீஸ் என்ற சரக்கு கப்பலை ஈரானின் கடற்படையான இஸ்லாமிய புரட்சிக் காவல் படை கடந்த 13-ம் தேதி சிறைபிடித்தது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு அக்கப்பல் மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுகத்துக்கு வந்து கொண்டிருந்தது. அந்த கப்பலில் 25 மாலுமிகள் இருந்ததாகவும், அவர்களில் 17 பேர் இந்தியர்கள் என்றும் பின்னர் தகவல் வெளியானது.

இதையடுத்து, இந்தியர்களை பத்திரமாக மீட்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியனை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கடந்த 14-ம் தேதி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

இந்த நிலையில், ஈரான் ராவணுவத்தால் கடந்த வாரம் சிறைபிடிக்கப்பட்ட எம்எஸ்சி ஏரீஸ் சரக்கு கப்பலில் இருந்த 17 இந்தியர்களில் ஒருவரான பெண் பணியாளர் ஆன் தேஸ்ஸா ஜோசப் இன்று பாதுகாப்பாக கொச்சி திரும்பியுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், எஞ்சிய 16 இந்தியர்களுடன் தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் தொடர்பில் உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்