செல்பி மோகம்; 2000 அடி நீர்வீழ்ச்சிக்குள் தவறி விழுந்த இளைஞர்...மீட்புப் பணியை பார்க்க குவிந்த சுற்றுலா பயணிகள்...

மராட்டியத்தின் அஜந்தா குகை அருகே செல்பி எடுக்கும்போது 2000 அடி நீர்வீழ்ச்சிக்குள் இளைஞர் ஒருவர் தவறி விழுந்தார்.

Update: 2023-07-24 09:10 GMT

மும்பை,

மராட்டிய மாநிலம் சோயேகான் தாலுகாவில் உள்ள நந்ததாண்டாவைச் சேர்ந்தவர், கோபால் சவான். இவர் தனது 4 நண்பர்களுடன் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) அஜந்தா குகையினைக் காண சுற்றுலா சென்றார். அதனின் அழகை ரசித்த பின்னர் அனைவரும் அஜந்தா மலை உச்சிக்கு சென்றனர்.

அதனருகில் சப்தகுந்தா நீர்வீழ்ச்சி உள்ளது. இது அஜந்தா மலை உச்சியையும், குகை வளாகத்தையும் பிரிக்கிறது. இந்த நீர்வீழ்ச்சி ஏறக்குறைய 2000 அடி ஆழம் இருக்கும். அஜந்தா மலை உச்சிக்கு சென்ற அவர்கள் அங்கு செல்பி எடுத்துள்ளனர்.

கோபால் சவானுக்கு செல்பி மோகம் அதிகம் என்பதால் நிறைய போட்டோ எடுத்தார். இருப்பினும் அவருக்கு மனம் நிறைவு இல்லை. மலை உச்சியின் விளிம்பிற்கே சென்றுவிட்டார். அங்கு செல்பி எடுக்கும்போது கால் தவறி சப்தகுந்தா நீர்வீழ்ச்சிக்குள் விழுந்தார்.

கோபாலுக்கு நீச்சல் தெரிந்ததால் நீந்தி அருகில் இருந்த கல்லினைப் பிடித்துக் கொண்டார். உடனே அவரின் நண்பர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு கோபால் பத்திரமாக கயிறு மூலம் காப்பாற்றப்பட்டார்.

மீட்புப் பணியைப் பார்க்க சுற்றுலா பயணிகள் குவிந்ததால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் அவர்களில் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாக பரவி வருகிறது.



Tags:    

மேலும் செய்திகள்