மணிப்பூர் வன்முறை: அமித்ஷா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது

மணிப்பூர் வன்முறை தொடர்பாக டெல்லியில் மத்திய அரசு சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Update: 2023-06-24 10:04 GMT

புதுடெல்லி,

மணிப்பூரில் கடந்த மாதம் இரு பிரிவுகளைச் சேர்ந்த மக்களிடையே மோதல் ஏற்பட்டதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது.

இந்த வன்முறை சம்பவங்களில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு 349 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கலவரம் தொடர்பான வழக்குகளை சிபிஐ சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.

இந்த நிலையில், டெல்லி, நாடாளுமன்ற கட்டிடத்தில் மத்திய அரசு சார்பில் மணிப்பூர் வன்முறை தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பல்வேறு கட்சிகள் பங்கேற்றுள்ளது.

மணிப்பூர் தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தில் திமுக சார்பில் திருச்சி சிவா எம்.பி. மற்றும் அதிமுக சார்பில் தம்பிதுரை ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தை காங்கிரஸ் கட்சி புறக்கணித்துள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்