உத்தரபிரதேசத்தில் உள்ள ஓட்டல்களில் பயங்கர தீ விபத்து

உத்தரபிரதேசத்தில் உள்ள ஓட்டல்களில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2024-03-13 06:19 GMT

லக்னோ,

உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டாவின் பிஸ்ராக் காவல் நிலையப்பகுதியில் அடுத்தடுத்து சில ஓட்டல்கள் செயல்பட்டு வருகின்றன. இன்று காலை இந்த ஓட்டல்களில் மக்கள் உணவருந்திக்கொண்டிருந்தனர்.

அப்போது அதில் உள்ள ஒரு ஓட்டலில் திடீரென தீப்பற்றியது. இதனை அறிந்த மக்கள் ஓட்டலில் இருந்து உடனடியாக வெளியேறினர். அந்த சமயத்தில் தீ மளமளவென அருகில் உள்ள ஓட்டல்களுக்கும் பரவியது.

அதனைத்தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு சம்பவம் குறித்து தெரிவிக்கப்பட்டது. உடனடியாக 10 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது,

மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உடனடியாக மக்கள் ஓட்டலில் இருந்து வெளியேறியதால் உயிர் சேதமோ, காயமோ ஏற்படவில்லை. 6 ஓட்டல்கள் மற்றும் 2 கடைகளில் தீ பரவியுள்ளது. தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்