இந்தியாவில் நீக்ரோக்கள்... காங்கிரஸ் மூத்த தலைவர் பேச்சால் அடுத்த சர்ச்சை

சாம் பிட்ரோடாவை பாதுகாக்கும் வகையில் இந்தியர்களை வெள்ளையர்கள், கருப்பர்கள் (நீக்ரோ அல்லது நீக்ரிடோ) என ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அழைக்கிறார் என பா.ஜ.க. கண்டனம் தெரிவித்து உள்ளது.

Update: 2024-05-09 23:33 GMT

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் அயல்நாட்டு பிரிவு தலைவராக இருந்தவர் சாம் பிட்ரோடா. இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டை நாம் ஒன்றுபடுத்த முடியும். கிழக்கு இந்தியாவில் இருப்பவர்கள் சீனர்கள்போல் இருக்கிறார்கள். மேற்கில் இருப்பவர்கள் அரேபியர்கள்போன்றும், வடக்கில் இருப்பவர்கள் வெள்ளையர்கள்போன்றும் தெரிகிறார்கள். தெற்கில் இருப்பவர்கள் ஆப்பிரிக்கர்கள்போல் இருக்கிறார்கள்.

எனினும் நாம் அனைவரும் சகோதர, சகோதரிகள். வெவ்வேறு மொழிகளையும், வெவ்வேறு மதங்களையும், பழக்கவழக்கங்களையும், உணவு வகைகளையும் நாம் மதிக்கிறோம் என பேசினார். அவருடைய இந்த பேச்சுக்கு பிரதமர் மோடி கடுமையான கண்டனம் தெரிவித்து பேசினார். காங்கிரஸ் கட்சியின் பிரிவினை மனப்பான்மையை வெளிப்படுத்தி உள்ளார் என்று கூறினார். ஆனால், அவர் பேசியது அவருடைய தனிப்பட்ட கருத்து என காங்கிரஸ் ஒதுங்கி கொண்டது.

இந்த சூழலில், காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறும்போது, புரோட்டோ ஆஸ்திரேலாய்டு (கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள்), மங்கோலாய்டு (கிழக்காசிய பகுதியை சேர்ந்தவர்கள்), நீக்ரிட்டோக்கள் (கருப்பு நபர்கள்) இந்தியாவில் உள்ளனர்.

நம்முடைய ஜனத்தொகையில் அவர்கள் உள்ளனர். ஆனால் அவர்களுடைய பழக்கவழக்கங்கள் வெவ்வேறானவையாக உள்ளன. யாரோ சிலர் கூறுவது (பிட்ரோடா கூறிய விசயங்களை குறிப்பிட்டு) என்பது அவருடைய கருத்து என சவுத்ரி கூறியுள்ளார்.

ஆனால், சிலர் வெள்ளையராகவும், சிலர் கருப்பராகவும் உள்ளனர் என்றும் கூறியுள்ளார். இதனால், இவருடைய பேச்சுகள் பிட்ரோடாவை பாதுகாக்கும் முயற்சியாகவே மற்ற கட்சிகளால் பார்க்கப்படுகிறது.

இதுபற்றி பா.ஜ.க.வை சேர்ந்த ஷெஜாத் பூனவல்லா கண்டனம் தெரிவித்ததுடன், 2022-ம் ஆண்டு ஜூலையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை பற்றி சவுத்ரி கூறிய சர்ச்சையான விசயங்களையும் மீண்டும் குறிப்பிட்டு உள்ளார். அவர் வெளியிட்ட எக்ஸ் வலைத்தள பதிவில், ஆதிர் ரஞ்சன் தன்னுடைய எல்லைகளை கடந்து விட்டார்.

சாம் பிட்ரோடாவை பாதுகாக்கும் வகையில் இந்தியர்களை வெள்ளையர்கள், கருப்பர்கள் (நீக்ரோ அல்லது நீக்ரிடோ) என அழைக்கிறார். இரு வார்த்தைகளுமே அவமதிக்க கூடியவை. அவர் கூறியவை எல்லாம் சாம் பிட்ரோடாவின் வார்த்தைகள். காங்கிரசின் சிந்திக்கும் முறையாக உள்ளது.

இந்தியர்களை சீனர்களாக, ஆப்பிரிக்கர்களாக, நீக்ரோவாக, கருப்பினராக அழைக்கின்றனர். சாம் மாமா கூறிய விசயங்களை நியாயப்படுத்துகின்றனரா? அதனாலேயே, அவரை வெளியேற்றாமல் உள்ளனரா? கடந்த காலத்தில் முர்முவை பற்றி கூறிய ஆதிர் ரஞ்சனை அவர்கள் வெளியேற்றுவார்களா? என ஷெஜாத் கேட்டுள்ளார். ஆனால், ஆதிர் ரஞ்சனின் பேச்சுகள் பற்றி காங்கிரஸ் கட்சி எதுவும் தெரிவிக்கவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்