ரோஜ்கார் மேளா திட்டம்; 51 ஆயிரம் பேருக்கு பிரதமர் மோடி பணி நியமன கடிதம் வழங்கினார்

நாட்டின் 8-வது ரோஜ்கார் மேளா திட்டத்தின் கீழ் 51 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அரசு பணிக்கான நியமன கடிதங்களை பிரதமர் மோடி வழங்கினார்.

Update: 2023-08-28 05:44 GMT

புதுடெல்லி,

பிரதமர் மோடி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகளில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள், பணியிலிருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மத்திய அரசு துறைகளின் மனித வளங்கள் குறித்து பிரதமருக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இதனடிப்படையில், அடுத்த ஒன்றரை ஆண்டுக்குள் சிறப்பு பணி நியமனங்கள் மூலம் மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 10 லட்சம் இடங்களை நிரப்பிட பிரதமர் மோடி அப்போது அறிவுறுத்தினார்.

இதனை தொடர்ந்து, நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க வகை செய்யும் ரோஜ்கார் மேளா என்ற திட்டம் பிரதமர் மோடியால் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 51,106 பேருக்கு பணி நியமன கடிதங்களை பிரதமர் மோடி இன்று காலை வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

இதன்படி, நாட்டின் 8-வது ரோஜ்கார் மேளா திட்டம் இன்று பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு பிரதமர் மோடி காணொலி காட்சி வழியே பணி நியமன கடிதங்களை வழங்கி உரையாற்றினார். நாடு முழுவதும் 45 இடங்களில், இந்த பணி நியமனத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்புக்கான கடிதங்கள்  நேரடியாக வழங்கப்படுகின்றன.

ஒவ்வொரு மாதமும் இந்த திட்டத்தின் கீழ் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு நாடு முழுவதும் நியமன கடிதங்கள் வழங்கப்படுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்