கள்ளக்காதலை கைவிட மறுத்த மனைவி மீது திராவகம் வீச்சு: கணவர் கைது

உயிருக்கு ஆபத்தான நிலையில் அமினா சிகிச்சை பெற்று வருகிறார்.

Update: 2024-02-25 00:07 GMT

பன்வெல்,

மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டம் பன்வெல் தாலுகா கைர்னே கிராமத்தை சேர்ந்தவர் ரம்ஜான் காஜி. இவரது மனைவி அமினா (வயது28). அமினாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த கணவர் ரம்ஜான் காஜி மனைவியை கண்டித்தார். ஆனால் இதை கேட்க மறுத்த அமினா, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தாக்கி அவமானப்படுத்தி உள்ளார்.

இதையடுத்து கணவர் ரம்ஜான் காஜி கள்ளக்காதலனை பிரிந்து, தன்னுடன் ஐதராபாத்திற்கு வருமாறு மனைவியிடம் கூறினார். அமீனா அதற்கும் மறுத்துவிட்டதாக தெரிகிறது.

இதனால் கடும் கோபம் அடைந்த அவர், சம்பவத்தன்று அமீனா வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தபோது அவரது முகத்தில் திராவகத்தை வீசி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதில் அமீனா முகம் மற்றும் உடல் பாகங்கள் வெந்து பலத்த தீக்காயம் அடைந்தார். வலியால் துடித்துக்கொண்டு இருந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அமினா சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பன்வெல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற ரம்ஜான் காஜியை தேடி வந்தனர். நேற்று முன்தினம் போலீசார் அவரை கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாளை மறுநாள் வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்