பிகினி உடையில் ஓடும் பஸ்சில் ஏறிய இளம்பெண்: திகைத்த பயணிகள் - வைரல் வீடியோ

பஸ்சில் பிகினி உடையுடன் இளம்பெண் ஒருவர் பயணித்துள்ள சம்பவம் டெல்லியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2024-04-18 14:46 GMT

புதுடெல்லி,

வித்தியாசமான உடைகளை அணிவது சமீபக காலமாக அதிகரித்து வருகிறது. அதுவும் பொதுவெளியில் வித்தியாசமான உடையில் தங்களை அடையாளப்படுத்திக்கொள்வதை மெட்ரோ நகரங்களில் அடிக்கடி பார்க்க முடிகிறது. சில நாட்களுக்கு முன்னர், டெல்லி மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் உள்ளாடைகளுடன் பயணித்த சம்பவம் விவாதங்களை கிளப்பியிருந்தது. அந்த வரிசையில் தற்போது மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

டெல்லியில், கூட்டம் நிரம்பி வழிந்த பஸ்சில் பிகினி உடை அணிந்த இளம்பெண் ஒருவர் ஏறியிருக்கிறார். இதைப் பார்த்துவிட்டு பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பஸ்சில் இருந்த சகபயணி ஒருவர் பஸ்சின் கதவருகே நின்றிருந்த அவரை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட இந்த விஷயம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவரது உடையைப் பார்த்து திகைத்து அருகில் இருந்த ஒரு பெண் பயணி அவரிடமிருந்து விலகிச் செல்கிறார். பின்னர், அந்தப் பெண்ணின் முன் அமர்ந்திருந்த மற்றொரு பயணியும் தனது இருக்கையை விட்டு வெளியேறுகிறார்.

'பொதுவெளியில் இப்படித்தான் உடை அணிய வேண்டுமா... இதுதான் பல பிரச்சினைகளுக்குக் காரணம்' எனவும் 'சோஷியல் மீடியாவில் கவன ஈர்ப்புக்காக இப்படி செய்ய வேண்டுமா? இது முட்டாள் தனம்' என்றும் சமூகதளவாசிகள் பிகினி பெண்ணை திட்டித் தீர்த்து வருகின்றனர். இன்னும் சிலர் இந்தப் பெண்ணுக்கு ஆதரவும் கொடுத்து வருகின்றனர். 'உடை என்பது அவருடைய விருப்பம். இதில் எதிர்ப்புத் தெரிவிக்க எதுவும் இல்லை' என அவர்கள் வக்காலத்து வாங்கி வருகின்றனர்.

மேலும், டெல்லி காவல்துறையை இந்த வீடியோவில் டேக் செய்திருக்கும் நெட்டிசன்கள் இந்தபெண் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதற்கு முன்பு, இதேபோல ஒரு சம்பவம் நடந்தது. அதாவது, நாக்பூர் சாலையில் நள்ளிரவு 2 மணியளவில் நிர்வாணமாக ஒரு நபர் தனது ஸ்கூட்டரில் செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்